Published : 23 May 2020 04:13 PM
Last Updated : 23 May 2020 04:13 PM

தெலங்கானாவில் கிணற்றிலிருந்து 9 சடலங்கள் மீட்பு : தற்கொலையா, கொலையா? அதிர்ந்து போன போலீஸார்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வீட்டின் கிணறு ஒன்றில் 9 சடலங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் சடலங்கள் இது என்பது தெரியவந்தது. மீதி 3 உடல்களில் இருவர் பிஹாரைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் திரிபுராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

முதலில் 4 சடலங்களை வியாழனன்று மீட்டனர். மீதி 5 சடலங்களை வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர். இவர்கள் உடல்களில் காயங்கள் எதுவும் தென்படவில்லை என்கின்றனர் போலீஸார். சந்தேக மரணங்கள் என்று இப்போதைக்கு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலைகளா, கொலைகளா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இருந்து வருகின்றனர்.

கிணற்றிலிருந்து இப்போது தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்டுள்ளது. இறந்த 9 பேரில் 7 பேர் பை தைக்கும் தொழிற்சாலை தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதில் ஒரு தொழிலாளரின் குழந்தைக்கு 3வது பிறந்தநாளையொட்டி அனைவரும் சேர்ந்து இரவு உணவு அருந்தியதும் தெரியவந்துள்ளது. அந்த 3 வயது குழந்தையும் இப்போது இல்லை.

மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் எரபெலி தயாகர் ராவ் மருத்துவமனையில் இவர்களின் உடலைப் பார்வையிட்டார். என்ன நடந்தது என்பது தெரிந்த பிறகே நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடம் என்றார்.

உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் இது தற்கொலை என்று போலீசார் சந்தேகித்தாலும் பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே எதுவும் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியும் என்கின்றனர்.

9 பேரின் இறுதிச் சடங்கையும் மாநில அரசே வாரங்கல்லில் மேற்கொள்ளலாம், இதற்கு உறவினர்கள் ஒப்புக் கொண்டால், இல்லையெனில் அவர்கள் கிராமத்துக்கு உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தக்குடும்பத்தின் தலைவருக்கு வயது 48, இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கத்திலிருந்து புலம்பெயர்ந்து வாரங்கலுக்கு வந்தார், என்கின்றனர் போலீசார்.

ஒரே நேரத்தில் 9 சடலங்களை கிணற்றில் இருந்து மீட்டது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது மேலும் இது கொலையா, தற்கொலையா என்பதும் புரியாத புதிராக ஆனதோடு, அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-ஏஜென்சி செய்திகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x