Published : 23 May 2020 07:48 AM
Last Updated : 23 May 2020 07:48 AM

தெலங்கானாவில் வெளிமாநில தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்பு: வாரங்கல் போலீஸார் தீவிர விசாரணை

தெலங்கானா மாநிலம், வாரங்கலில் உள்ள விவசாய கிணற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் உடல்களை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கொர்ரகுண்டா பகுதியில் சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான சணல் தொழிற்சாலை உள்ளது. இங்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். கரோனா தொற்றுகாரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் தொழிற்சாலை அருகே உள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் தொழிலாளர்களை தங்க வைத்திருந்தார் சதீஷ் குமார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சதீஷ் குமார் அங்கு சென்று பார்த்தபோது தொழிலாளர்களை காணவில்லை. அப்பகுதியில் தேடியபோது, ஒரு கிணற்றில் 4 பேரின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்த வாரங்கல் போலீஸார், வருவாய் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர்.

அதே கிணற்றில் இருந்து நேற்றுகாலையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 9 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களில் காயம் இல்லாததால் தற்கொலை வழக்காகவே போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இறந்தவர்களில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 2 பேரை காணவில்லை. ஆதலால் இது கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தையின் பிறந்தநாள்...

கொல்கொத்தாவை சேர்ந்த மக்சூத் (50), இவரின் மனைவி நிஷா (45) ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி தெலங்கானா வந்தனர். பின்னர் இவர்கள் வாரங்கலில் உள்ள சணல் தொழிற்சாலையில் பணியாற்றறி வந்தனர். இவர்களுக்கு ஷாபாத் (22), சோஹைல் (20) என்கிற மகன்களும் பூஸ்ரா (19) என்கிற மகளும் இருந்தனர். பூஸ்ராவிற்கு 3 வயதில் ஒரு மகன் இருந்தான்.

கருத்து வேறுபாடு காரணமாக பூஸ்ரா கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று இரவு பூஸ்ரா மகனின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி உள்ளனர். அப்போது சர்க்கரை பொங்கல் சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஒருவேளை சர்க்கரை பொங்கலில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x