Published : 23 May 2020 07:42 AM
Last Updated : 23 May 2020 07:42 AM

வெளி மாநிலங்களில் லட்டு பிரசாதம் விற்க அனுமதிக்கு காத்திருக்கும் தேவஸ்தானம்

திருப்பதி:

ஊரடங்கு காரணமாக, மே 31 வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிய லட்டு பிரசாதத்தை ஆந்திராவில் அனைத்து மாவட்ட தலைநகர்களில் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்கள் மற்றும் தகவல் மையங்களில் விற்பனை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வரும் 25-ம் தேதி முதல் 13 மாவட்டங்களில் 25 இடங்களில் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலங்களிலுள்ள சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தகவல் மையங்களில் லட்டு விற்பனை செய்ய அந்தந்த மாநில அரசுகளின் அனுமதி பெற வேண்டி உள்ளது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் பிற மாநிலங்களின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். உரிய அனுமதி கிடைத்ததும் மேற்கண்ட நகரங்களில் உள்ள தகவல் மையங்களில் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவைகளை ஆன்லைனில் பெற இதுவரை ttdsevaonline.com எனும் இணையதள முகவரியை பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த இணையதள முகவரி இன்று (சனிக்கிழமை) முதல் tirupatibalaji.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x