Last Updated : 22 May, 2020 09:27 AM

 

Published : 22 May 2020 09:27 AM
Last Updated : 22 May 2020 09:27 AM

முதல்நாளே ரூ.59 லட்சம் நஷ்டம்: அரசுப் பேருந்து இயக்கத்தால் கேரள அரசு கவலை

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அரசுப்பேருந்துப் போக்குவரத்தை இயக்காமல் இருந்த கேரள அரசு , மீண்டும் அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து, குறைந்த நேரத்தில், குறைந்த அளவு பேருந்துகளை புதன்கிழமை இயக்கியும் ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து கேரள அதிகாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

புதன்கிழமையன்று ஏறக்குறைய 1300 பேருந்துகளை மாவட்டங்களுக்கு ள்ளே மட்டும் கேரள அரசு இயக்கியது. காலை 7 மணி முதல் 11 வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நடத்துனர் அமரும் இடத்தில் பயணிகளுக்காக சானிடைசரும் வைக்கப்பட்டது. பயணிகள் தேவைப்பட்டால் சானிடைசரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தீவிரமான சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கையைப் பொறுத்து 24 முதல் 28 பயணிகள் மட்டுமே அமர அனுமதி்க்கப்பட்டது. எந்த பயணியும் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

இத்தனை கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பேருந்து இயக்கிய முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டது அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாளான புதன்கிழமை மட்டும கேரள அரசுப்பேருந்துக்கு கிடைத்தது ரூ.35 லட்சம், இதில் ஊழியர்கள் ஊதியம், டீசல், காப்பீடு, சானிடைசர் என மொத்தம் கி.மீ ஒன்றுக்கு இயக்கச் செலவு கி.மீ ரூ.45 செலவானது. குறைவான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கி.மீ ரூ.16 மட்டுமே கிடைத்தது. இதனால் ஒரேநாளில் அரசுக்கு ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 11-ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலக ஊழியர்களுக்காக மட்டும் பேருந்துகளை இயக்கி வருகிறது கேரள அரசு.இந்த சிறப்புப் பேருந்தில் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது

ஆனால், 50 சதவீதம் கட்டணம் அதிகரி்ப்புக்கு மக்கள் கடும் எதிப்புத் தெரிவித்தனர்,சில இடங்களில் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கட்டண உயர்வை அமல்படுத்துவதிலும் கேரள அரசுக்கு சி்க்கல் எழுந்துள்ளது.

இந்த சூழலில் அடுத்துவரும் நாட்களில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கும்பட்சத்தில் ஏற்படும் இழப்பைப் பொறுத்து முக்கிய முடிவுகளை கேரள அரசு எடுக்கும்

தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “ கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை இயக்கினால் மக்கள் தாக்குகிறார்கள். கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுக்கு எங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளோம். 20 பயணிகளுக்கு மேல் ஏற்றாமல் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x