Published : 22 May 2020 08:00 AM
Last Updated : 22 May 2020 08:00 AM

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கணவரை காணவில்லை என மனைவி புகார்: இறுதிச் சடங்கு செய்து விட்டதாக தெலங்கானா அரசு அறிவிப்பு

கோப்புப் படம்

ஹைதராபாத்

கரோனா தொற்றுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மாயமாகி விட்டார். இதனை தொடர்ந்து, தனது கணவரின் உடலை காட்ட வேண்டுமென மனைவி பிடிவாதம் பிடித்து வருகிறார். ஆனால், அவரின் சடலத்திற்கு இறுதிச் சடங்கு செய்து விட்டோம் என அமைச்சர் கூறி வருவதால் ஹைதராபாத்தில் புதிய சர்ச்சை ஏற்படுட்டுள்ளது.

ஹைதராபாத்தின் வனஸ்தலிபுரம் காலனியைச் சேர்ந்தவர் மதுசூதன் (42). இவர் அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக மதுசூதனும், மாதவியும் ஹைதராபாத் கிங் கோட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். மதுசூதனின் தந்தை ஈஸ்வரய்யா, காந்தி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுசூதன் ஏப்ரல் 30-ம் தேதி காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மே 16-ம் தேதிமாதவி குணமாகி வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது மாமனார் ஈஸ்வரய்யா கரோனா தொற்றால் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அவரது கணவர் மதுசூதன் மட்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறினர்.

இதையடுத்து மாதவி, காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். 2 நாட்கள் கழித்து மீண்டும் சென்றபோது, மதுசூதன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து தகவல் கிடைக்கவில்லை எனக் கூறிய மாதவி, கணவரின் உடலை வழங்குமாறும் கோரியுள்ளார். ஆனால், அவரது உடலை மாநகராட்சி சார்பில் இறுதிச் சடங்குகள் செய்து விட்டதாக அரசு மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாதவி அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கே. டி. ராமாராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, “மாதவியின் மாமனார் ஈஸ்வரய்யாகடந்த மே 1-ம் தேதி உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், அன்றைய தினமே மதுசூதனும் இறந்து விட்டார். ஆனால், ஒரே நாளில் இருவர் இறந்த செய்தியை அந்த குடும்பம் தாங்காது என்பதால், மதுசூதனின் உடலை ஹைதராபாத் மாநகராட்சியினர் கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் செய்து எரித்து விட்டனர்” என்றார்.

இதுகுறித்து மாதவி கூறும்போது, “என்னுடைய கணவர் இறந்தார் என்பதற்கு எந்தவித சாட்சியையும் மருத்துவமனை சார்பில் இதுவரை காட்ட வில்லை. அவரது சட்டை, பேண்ட் அல்லது இறந்த உடன் இறுதிச் சடங்கு செய்ததற்கான வீடியோ பதிவு, புகைப்படம் போன்ற எதுவும் இல்லை. நான் எப்படி நம்புவது? கணவரின் உடலை கடைசியாக பார்ப்பதற்கு கூட இவர்கள் காண்பிக்கவில்லை என்றால் ஏதோ சதி நடந்துள்ளது. சட்டப்படி போராடுவேன். அவர் உடல்நலம் குன்றி இறந்து விட்டார் என்றால், அவரது உடலையாவது இவர்கள் காட்ட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x