

டெல்லி உயர் நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் அவசர வழக்குகள் அனைத்தையும் காணொலி காட்சி மூலம் இன்று முதல் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் சிலஅமர்வுகள் மட்டுமே அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரித்து வருகிறது. மார்ச் 24-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் 20,726 அவசர வழக்குளை விசாரித்துள்ளன.
இந்நிலையில், மே 22-ம் தேதிமுதல் (இன்று) டெல்லி உயர் நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் அனைத்து அவசர வழக்குகளையும் விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் பிறப்பித்து உள்ளார்.
அனைத்து வேலை நாட்களிலும் டெல்லி உயர் நீதிமன்ற அமர்வுகள் தினந்தோறும் விசாரிக்கும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மனோஜ் ஜெயின்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 7 டிவிஷன் அமர்வு நீதிபதிகளும், 19 தனி நீதிபதிகளும் உள்ளனர். - பிடிஐ