Published : 21 May 2020 04:36 PM
Last Updated : 21 May 2020 04:36 PM

உம்பன் புயலால் ஏற்பட்ட சேதம்: மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.

மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநில முதல்வர்களுடன் பேசினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் ‘‘புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒடிசா மற்றும் மேற்குவங்க முதல்வர்களிடம் தொலைபேசியில் பேசினேன். இருமாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அம்மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அப்போது புயலால் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு குறித்து தகவல் திரட்டுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் இயல்பு நிலைமை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x