Last Updated : 21 May, 2020 11:55 AM

 

Published : 21 May 2020 11:55 AM
Last Updated : 21 May 2020 11:55 AM

குஜராத்திலிருந்து 1500 தமிழர்களுடன் முதல் தொழிலாளர் ரயில் வெள்ளியன்று சென்னை வருகை

புதுடெல்லி

குஜராத்திலிருந்து 1500 தமிழர்களுடன் ரயில் நாளை மே 22-ல் சென்னை வருகிறது. இவர்களை அம்மாநில நகரங்களின் தமிழ்சங்கங்கள் ஒருங்கிணைத்து நேற்று அனுப்பியுள்ளனர். இது புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி தமிழகத்துக்கு வரும் முதல் ரயில் ஆகும்.

குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழ்வாதாரத்திற்காக அவ்வப்போது வந்து செல்லும் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டத் தமிழர்களான இவர்கள், குஜராத்தின் தொழிற்சாலை பணியாளர்களுக்காக இட்லி, தோசை விற்றுப் பிழைப்பவர்கள்.

தெருக்களில் துணி மற்றும் பாத்திரங்கள் விற்கும் அன்றாடக் கூலிகளும் இத்தமிழர்களில் உண்டு. கரோனா வைரஸ் பரவலால் அமலாக்கப்பட்ட ஊரடங்கில் அனைவரும் பிழைக்க வழியில்லாமல் குஜராத்தில் சிக்கினர்.

இவர்களை போன்றவர்கள் வீடு திரும்ப மத்திய அரசு ஏப்ரல் 30 இல் ஒரு பொது விதிமுறைகள் வெளியிட்டது. இதன்படி, அவர்களை சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்ப 2 ரயில்களும் பேசித் தயாராகின.

இதற்கான ஏற்பாடுகளை சூரத், வாபி, அகமதாபாத் மற்றும் நவ்சாரி ஆகிய நகரங்களின் தமிழ் சங்கங்கள் திரட்டினர். குஜராத் அரசின் தமிழகப் பொறுப்பு அதிகாரியான பி.பாரதி.ஐஏஎஸ் மூலமாக அவை தமிழக அரசிற்கும் அனுப்பப்பட்டது.

தமிழக அரசின் இணையதளத்திலும் இவ்விரண்டு ரயில்களில் செல்லும் பயணிகள் விவரமும் பதிவிட்டும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதன் மீதான செய்தியை கடந்த மே 7 இல் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வெளியானது.

இதன் எதிரொலியாக இரண்டு ரயில்களுக்கும் தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்கியது. இதற்கான ஏற்பாடுகளில் இருந்த சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரிசெய்ய மேலும் 2 நாட்கள் பிடித்தன.

இதனிடையே, தமிழகத்தில் சிக்கிய குஜராத்வாசிகளுடன் சில பேருந்துகள் இங்கு வந்திருந்தன. இதில், ரயிலில் செல்லத் தயாராக இருந்த சுமார் 600 பயணிகள் கிளம்பி தமிழகம் சென்று விட்டனர்.

இதனால், மீதியுள்ள 1500 பயணிகளுடன் மே 6 நேற்று இரவு 11.00 மணிக்கு அகமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் கிளம்பியது. இது வழியில் பரோடா, சூரத் ஆகிய நகரங்களின் ரயில் நிலையங்களில் காத்திருந்த தமிழர்களையும் ஏற்றிச் சென்றது.

இவர்கள் அனைவருக்கும் குஜராத்தின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அகமதாபாத், சூரத், பரோடா, ராஜ்கோட், வாபி மற்றும் நவ்சாரி ஆகிய நகரங்களின் தமிழ் சங்கங்கள் உணவிற்கான ஏற்பாடுகள் செய்து வந்தன. இதற்காக, மும்பையின் தமிழ் சங்கங்களும் நிதி உதவி அளித்து உதவி இருந்தன.

நாளை காலை சுமார் 6.00 மணி அளவில் சென்னை சேரவிருக்கும் இந்த ரயில் பிறகு திருச்சி சென்றும் திருநெல்வேலி அடையும். இதில் பயணிக்கும் தமிழர்களுக்கு வழியிலும் உணவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த சிறப்பு ரயிலின் பயணிகள் அனைவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தமிழகத்தில் இறங்கிய பின்பும் அனைவருக்கும் தமிழக அரசு மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து உரியபடி அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் தமிழ் சங்கங்கள் உதவி

இதுபோல், வெளிமாநிலங்களில் பல்வேறு காரணங்களால் தமிழர்கள் அவதியுறுவது புதிதல்ல. இதற்கு முன் குஜராத்தின் பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களிலும் குஜராத் மற்றும் மஹராஷ்டிரா மாநில தமிழ் சங்கங்கள் தொடர்ந்து உதவி வருகின்றன.

இவர்கள், தமிழ் சங்கங்கள் எனும் பெயரில் தமிழகத்திலிருந்து முக்கியப் பிரமுகர்களை அழைத்து வெறும் விழாக்கள் மட்டும் நடத்துவதில்லை. மாறாக, ஏழை மற்றும் கூலி வேலை செய்யும் தமிழர்களின் இன்னல்களிலும் இணைந்து உதவிவருவது பாராட்டுக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x