Published : 21 May 2020 10:07 AM
Last Updated : 21 May 2020 10:07 AM

தேவஸ்தான தகவல் மையங்களில் ரூ.25-க்கு லட்டு பிரசாதம்

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பக்தர்களுக்காக ரூ.25-க்கு ஒரு லட்டு வீதம்விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் 20-ம் தேதி முதல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. எனினும், ஆகம விதிகளின்படி பூஜை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தினமும் 500 லட்டு, வடை பிரசாதங்கள் திருப்பதிநிர்வாக அலுவலகத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், அனைத்து தேவஸ்தான திருமணமண்டபங்கள் மற்றும் தகவல்மையங்களில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறும்போது, "மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்ததும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும் லட்டு பிரசாதம், 50 சதவீதம் விலையைக் குறைத்து ரூ.25-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தேவஸ்தான தகவல் மையங்கள், திருமண மண்டபங்களில் இந்த லட்டு பிரசாத விற்பனை விரைவில் தொடங்கும். அதிக லட்டு பிரசாதங்கள் தேவைப்படுவோருக்கும் ஆர்டரின் பேரில் விற்பனை செய்யப்படும். இதற்காக கோயில் இணை நிர்வாக அதிகாரி ஹரிபிரசாத் மற்றும் கோயில் பேஷ்கார் ஸ்ரீநிவாஸ் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x