Published : 20 May 2020 05:29 PM
Last Updated : 20 May 2020 05:29 PM

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி: அமித் ஷா அறிவிப்பு

நாடுமுழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்கள் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.

ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி நலன் கருதி ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் முககவசம் அணிதல், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது

*ஆசியர்கள், மாணவர்கள் உடல் பரிசோதனை செய்யவேண்டும்

* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்

*இதுபற்றி மாநில அரசு விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்

* சமூக விலலை எந்த காரணத்தாலும் புறக்கணிக்கக் கூடாது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x