

அழகான பெண்கள் குறித்து மட்டுமே எனது கணவர் கவலைப்படுவார், நான் சுமாரானவள் என்று டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தியின் மனைவி லிபிகா குற்றம் சாட்டியுள்ளார்.
சோம்நாத் பார்திக்கு எதிராக அவரது மனைவி அண்மையில் டெல்லி மகளிர் ஆணையம் மற்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சோம்நாத் பார்தி வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி போலீஸ் துறை ஆம் ஆத்மி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால் அழகான பெண்கள் ஆபத்தின்றி வெளியில் சென்றுவர முடியும் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவி லிபிகா கூறியதாவது:
எனது கணவர் அழகான பெண்கள் குறித்து மட்டுமே அதிகம் கவலைப்படுவார். நான் சுமாரானவள். அதனால்தான் அவர் எனக்கு கொடுமைகள் இழைத்தார். என்னை போன்ற சுமாரான பெண்களின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவது இல்லை என்று அவர் தெரிவித்தார்.