Published : 20 May 2020 07:55 AM
Last Updated : 20 May 2020 07:55 AM

கரோனா தடுப்பு மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றி: இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு வழங்கி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. அடுத்த 2 கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்தால் இந்த ஆண்டு இறுதியில் கரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் கடந்த ஜனவரியில் 'எம்ஆர்என்ஏ-1273' என்ற மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இந்த மருந்து, அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாடர்னா நிறுவனமும் அமெரிக்க அரசு நிறுவனமும் இணைந்து மனிதர்களிடம் ஆராய்ச்சியை தொடங்கின.

இதற்காக 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் முதல் அணியை சேர்ந்த 8 பேரின் ஆய்வுமுடிவுகள் முழுமையாக கிடைத்துள்ளன. அவர்கள் 8 பேரின் உடலிலும் கரோனா வைரஸை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகி உள்ளன.

இதுகுறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டால் ஜாக்ஸ் கூறியதாவது:

மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. வெகுவிரைவில் 2-ம் கட்ட பரிசோதனையை தொடங்க உள்ளோம். இதற்காக 600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 3-ம் கட்ட சோதனை வரும் ஜூலையில் தொடங்கப்படும். இதற்காக ஆயிரக்கணக்கானோர் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து சோதனைகளும் வெற்றி பெற்றால் இந்தஆண்டு இறுதி அல்லது அடுத்தஆண்டு தொடக்கத்தில் எங்களது 'எம்ஆர்என்ஏ-1273' மருந்து சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

எங்களது மருந்தில் சில பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதாவது நோயாளிகளின் உடலில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பகுதி சிவந்து காணப்படுகிறது. சிறிது வலியும் இருந்தது. அதிக அளவுமருந்து வழங்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு முதலில் தலைவலி, உடல்வலி இருந்தது. எனினும் அடுத்த நாளே அவர்களுக்கு தலைவலி, உடல்வலி குணமாகிவிட்டது. இந்த பக்கவிளைவுகளை குறைக்கஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றிருப்பதால் மாடர்னா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 39 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 'எம்ஆர்என்ஏ-1273' மருந்தை அதிக அளவில் தயாரிக்க சுவிட்சர்லாந்தை சேர்ந்த லோன்சா நிறுவனத்துடன் மாடர்னா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பா உட்பட உலகம்முழுவதும் மருந்தை சந்தைப்படுத்த மாடர்னா திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x