Last Updated : 19 May, 2020 02:28 PM

 

Published : 19 May 2020 02:28 PM
Last Updated : 19 May 2020 02:28 PM

ஊதியம் சிறிது அதிகமாகக் கிடைக்கும்: இபிஎஃப் பங்களிப்பை  மே முதல் ஜூலை வரை 10 சதவீதமாகக் குறைத்தது மத்திய அரசு

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் செலுத்தும் இபிஎஃப் பங்களிப்பை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மே மாதம் முதல் ஜூலை வரை 3 மாதங்களுக்குக் குறைத்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனால் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இபிஎஃப்புக்காப் பிடிக்கப்படும் தொகை அடுத்த 3 மாதங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே இருக்கும்.

இதனால் 4.3 கோடி அமைப்பு சார்ந்த துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் தொகையும் சிறிது அதிகமாக இருக்கும். 6.5 லட்சம் நிறுவனங்களும் பணத் தட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முடியும். மத்திய தொழிலாளர் நலத்துறையின் இந்த நடவடிக்கையால் அடுத்த 3 மாதத்துக்கு சந்தையில் ரூ.6,750 கோடி புழங்கும்.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

“2020-ம் ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு குறைக்கப்பட்ட இபிஎஃப் பங்களிப்பு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

லாக்டவுனால் தொழிற்சாலை, நிறுவனங்களில் பணிகள், உற்பத்தி நடைபெறாத சூழலில் பணியாளர்கள், நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பணமும் அதிகரிக்கும். நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையும் குறையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் தொகையைத் தொடர்ந்து 12 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறை அவர்களுக்குப் பொருந்தாது. சில நிறுவனங்களில் இபிஎஃப் தொகையான 24 சதவீதத்தையும் அரசே செலுத்துவதாக இருந்தால் அதற்கு இந்த விலக்குப் பொருந்தாது''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x