Published : 19 May 2020 09:14 AM
Last Updated : 19 May 2020 09:14 AM

குஜராத்தில் இருந்து சொந்த ஊர் சென்றபோது காய்ச்சலால் உயிரிழந்த இளைஞர்: உயிரைக் காப்பாற்ற போராடிய நண்பர் ஏமாற்றம்

காய்ச்சல் காரணமாக மயங்கிய அம்ரித்தை மடியில் வைத்து முதலுதவி செய்த சயூப்.

போபால்

பெற்றோரைக் காண்பதற்காக குஜராத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு சென்ற வெளிமாநிலத் தொழிலாளர் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அம்ரித் (23) மற்றும் சயூப் (24). சிறு வயது முதலே நண்பர்களான இருவரும் குடும்பவறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டனர். அதன் பின்னர், தங்கள் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று அங்குள்ள ஜவுளி ஆலையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ்ஊரடங்கு காரணமாக ஜவுளி ஆலை கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதால், இருவரும் வேலையிழந்தனர். பின்னர், அங்குள்ள முகாமில்பல வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் அவர்களும் தங்கவைக்கப்பட்டனர். ஊரடங்கு முடிந்த பின்னர் வீடு திரும்பிவிடலாம் என எண்ணியிருந்த அவர்களுக்கு, அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் எப்படியாவது சொந்த ஊர் சென்றுவிட வேண்டும் என இருவரும் முடிவெடுத்தனர்.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை லாரி ஒன்றில் ஏறி தங்கள் சொந்த ஊருக்கு இருவரும் பயணித்தனர். இந்த சூழலில், வெள்ளிக்கிழமை காலைமுதலாக அம்ரித்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி அவர் உட்கொண்டிருக்கிறார். ஆனால், காய்ச்சல் குறையவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது நண்பர் சயூப், ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு லாரி ஓட்டுநரிடம் கோரி உள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அடுத்த நாள் காலையில் மத்திய பிரதேச மாநிலம் கொலாரஸுக்கு லாரி வந்தபோது அம்ரித்துக்கு காய்ச்சல் அதிகமாகி மயக்கமடைந்துள்ளார். எனவே, அம்ரித்தை மருத்துவரிடம் காண்பிக்க முடிவு செய்த சயூப், அவருடன் லாரியை விட்டு இறங்கினார். பின்னர், அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு அம்ரித்தை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அம்ரித்தை அவசரப் பிரிவில் சேர்த்த மருத்துவர்கள், ஆக்சிஜன் சுவாசக் கருவிகளை பொருத்தி சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை மாலை அம்ரித் உயிரிழந்தார். கடைசி வரை போராடியபோதும் நண்பனை காப்பாற்ற முடியாத துக்கத்தில் சயூப் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்வதாக இருந்தது.

இதனிடையே, உயிரிழந்த அம்ரித் மற்றும் அவரது நண்பர் சயூப் ஆகியோரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அம்ரித்தின் உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x