Published : 19 May 2020 09:11 AM
Last Updated : 19 May 2020 09:11 AM

ஆந்திராவில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்வதற்கான தடை 31 வரை நீட்டிப்பு

ஆந்திராவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செயவதற்கு விதிக்கப்பட்ட தடை வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல கடந்த மார்ச் மாத இறுதியில் தடை விதிக்கப்பட்டது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட சில முக்கிய கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, 17-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில் கோயில்களை சில நிபந்தனைகளுடன் திறக்க மத்திய,மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சில கோயில் நிர்வாகத்தினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் ஊரடங்கு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர அமைச்சர் எல்லம்பல்லி ஸ்ரீநிவாச ராவ்அமராவதியில் நேற்று கூறும்போது, "கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை மே 31 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், சில முக்கியகோயில்களில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் சில ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அதுவரை கோயிலில் ஆகம விதிகளின்படி பூஜை நடைபெறும்" என்றார்.

இந்நிலையில், 31-ம் தேதிக்குபிறகு கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படலாம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட சில முக்கிய கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x