Published : 18 May 2020 02:51 PM
Last Updated : 18 May 2020 02:51 PM

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலத்தவர்கள் நுழைய 31-ம் தேதி வரை தடை: கர்நாடக அரசு அறிவிப்பு

மே 31-ம் தேதி வரை தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவிற்குள் நுழைய தடை விதித்து இன்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு முதல் கட்டமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரையும், மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டது. மேலும் இரு நாட்களுக்கு அதாவது மே 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, மே 17க்குப் பிறகு உள்ளூர் சுற்றுலா நோக்கங்களுக்காக ஜிம், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள், சில ஹோட்டல்களையும் திறக்க அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று கர்நாடக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

தற்போதுள்ள மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், மே 19 க்குப் பிறகு பல விஷயங்களுக்கு தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த முதல்வர் எடியூரப்பா, அதற்கு முன் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக மாநில அரசு காத்திருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஊரடங்கு 2 நாட்கள் மட்டும் இருந்தாலும் மே 31-ம் தேதி வரை தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவிற்குள் நுழைய தடை விதித்து இன்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுமட்டுமின்றி பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அனைத்து கடைகளும் திறக்க அனுமத வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x