Published : 17 May 2020 05:06 PM
Last Updated : 17 May 2020 05:06 PM
கரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகமான 30 ஆயிரம் கரோனா நோயாளிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலம் லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்ததில் எந்த வியப்பும் இல்லை. லாக்டவுனை நீட்டித்த மாநிலங்கள் வரிசையில் 4-வது மாநிலமாக மகாராஷ்டிரா இணைந்தது. ஏற்கெனவே மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்கள் லாக்டவுனை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே கரோனா வைரஸால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில்தான். நாள்தோறும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கில் நோயாளிகளும் உருவாகின்றனர். இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 30 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே லாக்டவுனை நீட்டிக்கக் கோரியிருந்தார். 4-வது கட்ட லாக்டவுனும் தொடரும் என முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சூசகமாகத் தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் வித்தியாசமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
இன்னும் மத்திய அரசு அதிகாரபூர்வமாக லாக்டவுன் அறிவிப்பை வெளியிடாத நிலையில் 3-வது கட்ட ஊரடங்கு 17-ம் தேதி (இன்று) முடியும் நிலையில் வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது
இதற்கான உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் அஜெய் மேத்தா பிறப்பி்த்துள்ளார். அந்த உத்தரவில், “ மகாராஷ்டிரா மாநிலத்தில் லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தளர்வுகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் அதிகமான தளர்வுகளும் இருக்கும். போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, அத்தியாவசியச் சேவைக்கான வாகனப்வ்போக்குவரத்தும் அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT