Last Updated : 17 May, 2020 02:07 PM

 

Published : 17 May 2020 02:07 PM
Last Updated : 17 May 2020 02:07 PM

பள்ளிக் கல்விக்காக 12 புதிய சேனல்கள்; 100 பல்கலைக்கழங்களில் ஆன்லைன் கோர்ஸ்: நிர்மலா சீதாராமன் கல்வி அறிவிப்பின் அம்சங்கள்

இணையதள வசதி இல்லாத கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்காக ஸ்வயம் பிரபா டிடிஎச் சேவை மூலம் பள்ளிக் கல்விக்காக கூடுதலாக 12 சேனல்கள் தொடங்கப்படும். ஆன்லைன் கல்வி வழி அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். கடந்த புதன்கிழமை முதல் ரூ.20 கோடிக்கான சுயசார்பு பொருளாதாரத்துக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும்.

முதல் கட்டமாக நிர்மலா சீதாராமன் ரூ 5 லட்சத்து 94 ஆயிரத்து 550 கோடிக்குத் திட்டங்களை அறிவித்தார். 2-வது கட்டமாக ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கும், 3-வது கட்டமாக ரூ.1.50 லட்சம் கோடிக்கும், 4-வது மற்றும் 5-வது கட்டமாக ரூ.48 ஆயிரத்து 100 கோடிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து ஆயிரத்து 603 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.20.97 லட்சத்துக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 5-வது கட்ட அறிவிப்புகளில் கல்விக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதில் உள்ள அம்சங்கள்:

  • டிஜிட்டல் கல்விக்காக பிரதமர் இவித்யா திட்டம் உடனடியாகத் தொடங்கப்படும். ஆன்லைன் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • பிரதமர் இ-வித்யா டிஜிட்டல் கல்வி திட்டத்தில் அனைத்து வகுப்பினருக்கும் இணையவழி பாடப்புத்தகங்கள், க்யூஆர் கோட் மூலம் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்தல் அறிமுகப்படுத்தப்படும். ஒரு தேசம், ஒரு டிஜிட்டல் தளம் என்று அறிமுகப்படுத்தப்படும்.
  • பள்ளிக் கல்விக்காக தற்போது 3 கல்விச் சேனல்கள் உள்ளன. இணையதள வசதி இல்லாத கிராமங்களில் உள்ள மாணவர்களுக்காக ஸ்வயம் பிரபா டிடிஎச் சேவை மூலம் பள்ளிக் கல்விக்காக கூடுதலாக 12 சேனல்கள் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல், கல்வித்தொடர்கள், ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடங்களை நடத்தி உரையாட வசதி செய்யப்படும்.
  • கல்வி தொடர்பான வீடியோக்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கு வசதியாக டாடா , ஏர்டெல் டிடிஹெச் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்வயம் பிரபா சேனல்களில் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை நாள்தோறும் 4 மணிநேரம் ஒளிபரப்புவதற்கான நேரம் ஒதுக்குவதற்கு டிடிஹெச் ஆப்ரேட்டர்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
  • இ-பாடசாலைத் திட்டத்தில் புதிதாக 200 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் சிறப்புப் பாடங்கள், வானொலி நிகழ்ச்சிகள், சமூக வானொலி ஏற்பாடு செய்யப்படும்.
  • வரும் 30-ம் தேதிக்குள் பிரதமர் இ-வித்யா திட்டத்தின் கீழ் 100 பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
  • லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து மத்திய அரசின் தீக்ஷா இணையதளத்தை 61 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் மனநலம், உணர்வுரீதியாக ஆரோக்கியமாக இருக்க மனோதர்பன் திட்டம் தொடங்கப்படும்.
  • பள்ளி, சிறுவயது மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
  • வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாம் வகுப்பில் கற்றல் நிலை, அதன் பலன்களை அடைவதை உறுதி செய்வதற்கான தேசிய அடித்தள எழுத்தறிவு மற்றும் எண் இயக்கம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உருவாக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x