Last Updated : 17 May, 2020 11:43 AM

 

Published : 17 May 2020 11:43 AM
Last Updated : 17 May 2020 11:43 AM

உ.பி.சாலையில் 24 பேர் பலி எதிரொலி; புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து வசதி: யோகி ஆதித்யநாத் உத்தரவு

உ.பி.யில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவர்கள் இனி நடக்கவோ பிற வாகனங்களில் செல்லவோ தேவையில்லை, பேருந்துகளில் செல்லலாம் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதலே அமலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை அவுரியா சாலை விபத்தில் 24 புலம்பெயர்ந்தோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

காணொலி மூலம் நடந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான அவசரக் கூட்டத்திற்கு பிறகு பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எந்தவொரு புலம்பெயர்ந்தோரையும் கால், சைக்கிள் அல்லது அங்கீகரிக்கப்படாத வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது. இனி எங்காவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் இடங்களுக்கு நடந்து செல்வதைக் கண்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

புலம்பெயர்ந்தோர் அனைவரையும் எல்லை நுழைவு இடங்களிலேயே நிறுத்தி, உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த நடைமுறைக்குப் பிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்துகளில் தங்கள் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதலே உ.பி. மாநில சாலைவழி போக்குவரத்துக் கழகம் (யு.பி.எஸ்.ஆர்.டி.சி) உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகளை அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உ.பி. மாநில சாலைவழி போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜ் சேகர் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர்களின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் தேவையான எண்ணிக்கையிலான பேருந்துகளை அனுப்புவோம்.

புலம்பெயர்ந்தோரை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களில் இறக்கிவிட்டு திரும்பி வரும்போது, மற்ற புலம்பெயர்ந்தோர் சாலைகளில் நடந்து செல்வதைப் பார்த்தால், அவர்களை காலியான பேருந்துகளில் ஏற்றி மாவட்ட எல்லைகளில் இறக்கிவிட வேண்டும் ஓட்டுநர்களுக்கு என்று அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களின் எல்லைகளிலும் உள்ள பிக்-அப் பாயிண்டுகளில் பேருந்துகள் நிறுத்தப்படும்.'' என்றார்.

டெல்லியில் நடந்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் இன்று காலை பேருந்துக்காக காத்திருக்கும் காட்சி.

முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்தவுடனே நள்ளிரவு முதல், மாநில தலைநகரின் அனைத்து நுழைவு இடங்களிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு உணவு தண்ணீர் வழங்கப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதற்கான சோதனைகள் செய்யப்பட்டன.

ஒரு மணி நேரத்திற்குள், லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசை காணப்பட்டது. ஜான்சியில் மத்திய பிரதேச எல்லையில் உள்ள ரக்சாவில், போக்குவரத்து நெரிசல் ஞாயிற்றுக்கிழமை காலை கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் வரை நீண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x