Last Updated : 17 May, 2020 10:14 AM

 

Published : 17 May 2020 10:14 AM
Last Updated : 17 May 2020 10:14 AM

மதமாநாட்டிற்கு வந்து டெல்லியில் சிக்கிய தமிழர்கள் ரயிலில் தமிழகம் கிளம்பினர்

தப்லீக்-எ-ஜமாத்தின் மதமாநாட்டிற்காக டெல்லி வந்து கரோனாவால் சிக்கிய தமிழர்கள் நேற்று திருச்சி கிளம்பினர். கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் கடந்த 46 நாட்களாக டெல்லியின் முகாம்களில் தங்கியிருந்தவர்கள்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க தேசிய அளவில் அமலான ஊரடங்கில் சுமார் 700 தமிழர் உள்ளிட்ட 4000 பேர் டெல்லியில் சிக்கினர். இவர்கள், தப்லீக்கின் தலைமையகமான நிஜாமுத்தீன் பகுதியின் மர்கஸ் மற்றும் டெல்லியின் பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்தனர்.

மார்ச் 27 முதல் 31 வரையில் டெல்லி போலீஸாரால் அனைவரும் மீட்டு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டனர். இதன் முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சைக்கும், தனி முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகாமில் உணவு, மருந்துகள் போன்றவை டெல்லி அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதன் மீதான செய்திகள் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் விரிவாக வெளியாகி வந்தது.

சுமார் 40 நாட்களுக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 4000 தப்லீக்கினரை வீட்டிற்கு அனுப்பி வைக்க டெல்லி அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பேருந்து மற்றும் ரயில்களில் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

45 நாட்களுக்கு பின் டெல்லியின் 6 முகாம்கள்ம் காலிசெய்யப்பட்டு அதில் தங்கியிருந்த சுமார் 700 தமிழர்களும் நேற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். 04074 எனும் எண் கொண்ட இந்த சிறப்பு ரயில் நேற்று மதியம் 3.15 மணிக்கு பழைய டெல்லி ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பியது.

இதற்கு 1247 பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 1153 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். டெல்லியில் இருந்து

திருநெல்வேலி வரை செல்லும் ரயிலில் டெல்லியில் சிக்கிய மாணவர்களும், பிறரும் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக அனைவருக்கும் இரண்டு முறை கரோனா சோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. அனைவரது பயணத்தின் ஒருங்கிணைப்பு முயற்சியில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

டெல்லியின் 24 முகாம்களில் இருந்து டெல்லி அரசின் 71 பேருந்துகளில் தப்லீக்கின் தமிழர்கள் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரயில் நிலையத்தில் வந்தவர்களுக்கும் உடலின் வெட்ப அளவு சோதிக்கப்பட்டு ஏற அனுமதிக்கப்பட்டனர்.

பிறகு சமூகவிலகலுடனான பாதுகாப்புடன் ரயில் பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். ஆனால், இது பெரும்பாலான ரயில் பெட்டிகளில் கடைப்பிடிக்காமல் அனைத்து இருக்கைகளும் அமர்த்தப்பட்டிருந்தனர்

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழக தப்லீக் பயணிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த 45 நாட்களாக மருத்துவமனையிலும், முகாம்களிலும் என இருந்தபோது பல்வேறு இன்னல்களுக்கும் உள்ளானதை மறக்க முடியாது. 5 தமிழர்களும் பரிதாபமாகப் பலியாகினர்.

14 நாட்கள் தனிமை முடிந்த பின்பும் எங்களை அரசு வைத்து சோறு போடவேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? என்பது புரியவில்லை.’ எனத் தெரிவித்தனர்.

டெல்லியுடன் உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷெஹரில் 9 மற்றும் சஹரான்பூரின் 40 தமிழக தப்லீக்கினரும் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இவர்கள் உள்ளிட்ட உபியில் சிக்கிய தப்லீக்கினர் அனைவர் மீது தொற்று நோய் பரவல் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு வாரங்களுக்கு பின் அனைவரும் உபி நீதிமன்றங்களின் வழக்குகளில் ஆஜராக மீண்டும் வர வேண்டி இருக்கும். இவர்கள் மீதான வழக்குகளை நடத்த, தப்லீக்-எ-ஜமாத்தால் ஒரு வழக்கறிஞர்கள் குழு அமர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதி பெற்ற இந்த ரயில், வழியில் எங்கும் நிற்காமல் நாளை திங்கள் கிழமை இரவு திருநெல்வேலி சேர உள்ளது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் ரயில் நிலையங்களிலும் பயணிகளை இறக்கி விடும்.

தமிழகம் சேரும் இப்பயணிகளுக்கு ரயில் நிலையங்களிலேயே கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகள் வெளியாவது வரை அரசு பராமரிப்பில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x