55 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் பிரசாதம் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

55 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் பிரசாதம் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல், கோயில் எப்போது திறப்பார்கள்என ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனினும் திருமலையில் தினமும் சுவாமிக்கு அனைத்து பூஜைகளும் ஆகம விதிகளின்படி நடைபெற்று வருகிறன்றன. இந்நிலையில் சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்த லட்டு மற்றும் வடை பிரசாதங்களை திருப்பதியில் உள்ள பிரசாத மையத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதன்படி, 500 லட்டு மற்றும் 500 வடை பிரசாதங்களை தேவஸ்தானம் நேற்று விற்பனை செய்தது.இதை அறிந்த பக்தர்கள், 55 நாட்களுக்கு பிறகு பிரசாத மையத்தில் திரண்டனர். இவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். எனினும், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லட்டு, வடை பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in