Published : 16 May 2020 09:14 PM
Last Updated : 16 May 2020 09:14 PM

வங்கக்கடலில் புயல் சின்னம்: தயாராகிறது தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு

வங்காள விரிகுடாவிலிருந்து வரவிருக்கும் புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்த தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது.

வங்காள விரிகுடாவிலிருந்து வரவிருக்கின்ற புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காக அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கவுபா தலைமையிலான, தேசிய இடர் மேலாண்மைக் குழுவின் (NCMC), கூட்டம் இன்று நடைபெற்றது.

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து சூறாவளிப் புயலாக மாறி 2020 மே 20, அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானியல் ஆய்வுத் துறை தெரிவித்தது. மிக வேகமாக பலத்த காற்று வீசும் என்றும், கடலில் பெருத்த அலைகள் இருக்கும் என்றும், பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூறாவளிப் புயலின் காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளைச் சமாளிப்பதற்குத் தயாரான நிலையில் இருப்பதாக, சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள் கூட்டத்தின் போது உறுதியளித்தனர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாநில அரசுகள் மீனவர்களை எச்சரித்துள்ளன. பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான முகாம்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதிப்படையாத வண்ணம், மக்களை வெளியேற்றுவதற்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன

தேசிய பேரிடர் நிவாரணப் படை, இராணுவப்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை மாநில அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அவர்கள் போதுமான அளவிற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய முகமைகளுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. தற்போதைய நிலைமை குறித்தும், காப்பாற்றுதல் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஆயத்த நிலை குறித்தும், அமைச்சரவைச் செயலர் பரிசீலித்தார். தேவையான உடனடி உதவிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x