Published : 16 May 2020 08:29 PM
Last Updated : 16 May 2020 08:29 PM

8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்பத்தினருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ஏற்பாடு

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 8 கோடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கிரிஷி பவனில் இன்று காணொளி மூலம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடியிலான சிறப்புப் பொருளாதார மற்றும் விரிவான உதவித் தொகுப்புகள் திட்டத்தை 2020 மே 12 ஆம் தேதி அறிவித்தார்.

பொருளாதார நடவடிக்கைகளின் (தற்சார்பு இந்தியா) கீழ், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகள் பயன்பெறும் வகையில், பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராதவர்கள் அல்லது மாநிலங்களின் குடும்ப அட்டைகளைப் பெறாத 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வழங்கும் திட்டம் இதில் அடங்கும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு (2020 மே, ஜூன் மாதங்களுக்கு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இன்று புதுடெல்லியில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார்.

நெருக்கடியான கோவிட்-19 சூழ்நிலையில் குடிபெயர்ந்தவர்களின் துயரங்களைக் குறைக்கவும், அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாஸ்வான் தெரிவித்தார். மாநிலத்துக்குள் இவற்றை எடுத்துச் செல்தல், டீலர்களுக்கு உரிய கமிஷன் உள்ளிட்ட மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உணவு தானியங்களை முழுமையாக விநியோகம் செய்த பிறகு, அதுகுறித்த தகவல்களை, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாஸ்வான் தெரிவித்தார்.

உணவு தானியங்கள் மீதி இருந்தால் அதுகுறித்த தகவல்களை, 2020 ஜூலை 15க்குள் துறைக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x