Published : 16 May 2020 03:40 PM
Last Updated : 16 May 2020 03:40 PM

வங்க கடலில் உருவாகும் புயல்;  மேற்குவங்கம், ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

வங்ககடலின் தென்கிழக்கில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக உருவெடுத்து மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சூறாவளி புயல் எச்சரிக்கைப் பிரிவு இன்று கூறியுள்ளதாவது:

வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்; திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (வங்கதேசம்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கோப்புப் படம்

இது விரைவாக மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் கடும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கக் கூடும். 2020, மே 17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற்கு முகமாக நகர்ந்து, மீண்டும் வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் வடக்கு வடகிழக்கு முகமாகத் திரும்பி, 2020, மே18 முதல் 20 வரை மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகரக் கூடும்.

ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் மே 18 மாலை முதல் ஆங்காங்கே சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே19 அன்று ஒரு சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும்.

கங்கை நதி பாயும் மேற்கு வங்கப்பகுதிகளில் 2020, மே19 அன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான, வெகு பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று சிற்சில பகுதிகளில் ஆங்காங்கே வெகு பலத்த மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x