Last Updated : 16 May, 2020 03:29 PM

 

Published : 16 May 2020 03:29 PM
Last Updated : 16 May 2020 03:29 PM

பசுக்களை பாதுகாக்க எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்கலாம்: உ.பி. மாநில சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு

இனி உத்திரப்பிரதேச எம்எல்ஏக்களின் தொகுதி வளர்ச்சிக்கான நிதியில் பசுக்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு அம்மாநில சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

வட இந்திய மாநிலங்களில் பசுக்களை பக்தியுடன் வணங்கும் வழக்கம் உள்ளது. இதனால் குறிப்பாக உ.பி.யில் பசுக்களின் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.

அம்மாநில அரசு சார்பிலும், சமூகசேவை அமைப்புகளாலும் பசுக்களை பாதுகாக்கும் கோசாலைகளை ஆயிரக்கணக்கில் அமைந்துள்ளன. எனினும், பசுக்களின் பராமரிப்பு போதாமல் அவை உண்ண உணவின்றி சாலைகளில் செத்து மடியும் நிலையும் உபியில் நிலவுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி வந்த பின்பு பசுக்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் சில அரசியல் காரணங்களும் இருப்பதால் உபியின் எம்எல்ஏக்கள் பசுப்பாதுகாப்பிற்காக நிதி அளிக்க முன்வந்தனர்.

தமது தொகுதி வளர்ச்சிக்கான நிதியை பசுவின் பாதுகாப்பிற்காக ஒதுக்கவும் விரும்பினர். ஆனால், இதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் அதற்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது.

இதை தற்போது மாற்றி பசுக்களுக்கு தங்குமிடம் அமைத்து தருவது போன்ற பராமரிப்பிற்கும் இடமளிக்க சட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, இனி உபி எம் எல் ஏக்கள் தம் தொகுதிகளில் உள்ள கோசாலைகளுக்கும் நிதி ஒதுக்க முடியும்.

இது குறித்து உபி மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் முதன்மை செயலாளரான மனோஜ் குமார்சிங் கூறும்போது, ‘இனி எம்எல்ஏக்கள் 2020-21 ஆம் ஆண்டு முதல் தம் தொகுதி வளர்ச்சி நிதியில் பசுக்களுக்கு தங்குமிடம், சுற்றுச்சுவர் அமைக்கவும் ஒதுக்கலாம். ஆனால்,

இதை தனியாரால் பராமரிக்கப்படும் கோசாலைகளுக்கு அளிக்க முடியாது.’ எனத் தெரிவித்தார்.

இதன் விரிவான தகவல்களுடன் மே 13 இல் வெளியிடப்பட்ட உபி அரசின் ஆணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தில் திருத்தமும் செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உபி அரசின் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் பசுக்களின் பாதுகாப்பிற்காக ரூ.600 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் பிறகும் உபியில் பகுதிகளில் பசுக்கள் அநாதரவாக திரிவது தடுக்க முடியாமல் உள்ளது.

இங்கு வறட்சி அதிகம் நிலவும் புந்தேல்கண்ட் பகுதியின் எட்டு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகவும் தொடர்கிறது. இவர்களது வயல்களில் பயிர்களை பசுக்கள் மேய்ந்து விடுவதால் பல லட்சம் மதிப்புள்ள பயிர்கள் நாசமாவதாகவும் புகார்கள் உள்ளன.-16-05-2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x