Last Updated : 16 May, 2020 03:42 PM

 

Published : 16 May 2020 03:42 PM
Last Updated : 16 May 2020 03:42 PM

தினமும் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் 'தாபா' உரிமையாளர்

நடைபயணமானவே சொந்த ஊருக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார் பிஹாரைச் சேர்ந்த 'தாபா' உரிமையாளர் ஒருவர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் விதித்த ஊரடங்கு காரணமாக வணிக நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ள நிலையில், ஒரு தாபா உரிமையாளர் திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் உணவு வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியபோது, சாதாரண மனிதாபிமானம்தான் பெரியதாக வேறொன்றுமில்லை என்கிறார்.

உத்தரப் பிரதேச எல்லையில் சரண் மாவட்டத்தின் ரிலிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஆதித்யா ராஜ் தாபா நெடுஞ்சாலை உணவகம். இது தற்போது உத்தரப் பிரதேசத்திலிருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு இளைப்பாறும் இடமாக மாறிள்ளது.

தாபா உரிமையாளர் பசாந்த் சிங் தனது தாபாவை அனைத்து மக்களுக்குமான சமையலறைக் கூடமாகவே மாற்றிவிட்டார். தினமும் சுமார் 500 பேருக்கு இலவச உணவளித்து வருகிறார். ஊரடங்கு தொடங்கிய பிறகு இங்கு சாப்பிடும் மக்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்பதற்காகவே பணம் செலுத்தும் கவுன்ட்டரைப் பூட்டியுள்ளார்.

இதுகுறித்து பசாந்த் சிங் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது:

"இதைச் செய்வதன் மூலம் எனக்கு சுய திருப்தி கிடைக்கிறது. நாடு தழுவிய ஊரடங்கு தொடங்கிய பின்னர், உத்தரப் பிரதேசம் வழியாக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் பிஹார் மற்றும் ஜார்க்கண்டிற்கு செல்வதைப் பார்த்தேன்..தேசிய நெடுஞ்சாலையில் சில தாபாக்கள் (உணவகங்கள்) திறக்க அரசு உத்தரவிட்ட பிறகு மீண்டும் கடையைத் திறந்தேன்.

சுமார் 17 நாட்களுக்கு முன்பு கூட்டமாக வந்து சில தொழிலாளர்கள் உணவு கேட்டார்கள். அவர்களிடம் பணம் இல்லை என்பது தெரிந்தது. உணவளிப்பதில் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். அன்றிலிருந்து அவர்கள் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயன்றேன். அதன்பிறகுதான் நடந்தே செல்லும் இவர்களிடம் ஏன் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்ததை உதவலாமே என்று தோன்றியது. இப்படிச் செய்வதற்குக் காரணம் சாதாரண மனிதாபிமானம்தான். வேறொன்றுமில்லை.

காலையில் வரும் மக்களுக்கு 'குர்-சிவாடா' (வெல்லம் மற்றும் அழுத்திய அரிசி) வழங்கப்படுகிறது, பிற்பகல் முதல் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் உணவு வழங்கப்படுகிறது. இது இரவு வரை நீடிக்கும். வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வதால் இந்த இடம் அடிக்கடி சுத்திகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 500 முதல் 700 பேர் இங்கு சாப்பிடுகிறார்கள். வியாழக்கிழமை அதிகமான மக்கள் வந்தனர். எனவே காய்கறிகள் சீக்கிரமாகவே முடிந்துவிட்டன. ஆரம்பத்தில் சில சிக்கல்களையும் எதிர்கொண்டேன். ஆனால் இப்போது கிராமவாசிகளும் முழு ஆதரவை அளித்து வருகின்றனர். கிராமவாசிகள் காய்கறிகள், அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த சமூக சேவையில் சமையல்காரர்களும் இணைந்துகொண்டனர். தங்கள் சேவைக்கு எந்தவித ஊதியமும் வேண்டாம் என்கிறார்கள் அவர்கள்''.

இவ்வாறு பிஹாரைச் சேர்ந்த தாபா உரிமையாளர் பசாந்த் சிங் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

25 பேருடன் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருக்கும், ஜார்க்கண்டின் பாலமு மாவட்டத்தில் உள்ள சான்பூரைச் சேர்ந்த தொழிலாளி மோகன் கூறுகையில், ''டெல்லியில் இருந்து நாங்கள் வருவதால் வழியில் பலரும் பூரி, கச்சோரி, தின்பண்டங்கள் போன்றவற்றைக் கொடுத்தனர், ஆனால், எங்களுக்கு இங்கே சுவைமிகுந்த 'டால்-சாவல்' கிடைத்தது. அதன் பிறகு நான் மிகவும் திருப்தி அடைந்தேன். ஏனென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற சுவையான உணவை நான் சாப்பிட வேண்டியிருந்தது.

அதுமட்டுமின்றி வழியில் பசியெடுக்கும் என்று இங்கு வந்து செல்பவர்களிடம் உலர் ரேஷன் எனப்படும் அரிசி மாவு, பருப்பு மாவு, பால் பவுடர், சர்க்கரை கலந்த உணவு ஒன்றைத் தருகிறார். சுவைமிக்க இவ்வுணவைச் சாப்பிட்டால் வயிறும் நிறைந்துவிடும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x