Last Updated : 16 May, 2020 01:14 PM

 

Published : 16 May 2020 01:14 PM
Last Updated : 16 May 2020 01:14 PM

லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்? கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை 

பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் 3-வது கட்டம் நாளையுடன் முடிவதையடுத்து, 4-வது கட்ட லாக்டவுன் குறித்தும், வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினார்.

நார்த் பிளாக் அலுவலகத்தில் நேற்று மாலை தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 5 மணிநேரம் பல்வேறு கட்டங்களாக இரவு வரை நீடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மாநில அரசுகள், 4-வது லாக்டவுனில் எவ்வாறு தளர்வுகள் இருக்க வேண்டும் என்ற கருத்துகளை அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில், இறுதிக்கட்ட வழிகாட்டி நெறிமுறைகளை உறுதி செய்யும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். வரும் 18-ம் தேதிக்கு முன்பாக 4-ம் கட்ட லாக்டவுன் வெளியாகும், முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆதலால், நாளைக்குள் வழிகாட்டி நெறிமுறைகளை அறிவிக்க, பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

''பெரும்பாலான மாநிலங்கள் 4-வது கட்ட லாக்டவுனில் தளர்வு தேவை, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுள்ளன. சில மாநில அரசுகள் லாக்டவுனே இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதற்கு ஏற்றார்போல் மிசோரம் அரசு லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. ஷ்ராமிக் ரயில்கள் தவிர மற்ற பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டாம் என பிஹார் அரசு கேட்டுக்கொண்டுள்ளது

எந்த மாநில அரசும் லாக்டவுனை முழுமையாகத் தளர்த்துங்கள் எனக் கேட்கவில்லை, படிப்படியாக லாக்டவுனைத் தளர்த்தலாம், பொருளாதார நடவடிக்கையைத் தொடங்கலாம் என்றே கேட்டுள்ளன.

அதேசமயம், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களை பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்க அதிகாரம் தேவை. மத்திய அரசு அறிவிக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளன. அந்தக் கோரிக்கையும் பரிசீலிக்கப்படலாம். மேலும் லாக்டவுனை நீட்டிப்பது, தளர்த்துவது தொடர்பாக முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படலாம்.

4-வது லாக்டவுனில் பல்வேறு தளர்வுகள் நிச்சயம் இருக்கும். குறிப்பாக பச்சை மண்டலங்கள் முழுமையாக திறக்கப்படும், ஆரஞ்சு மண்டலத்தில் குறைந்த கட்டுப்பாடுகளுடனும், சிவப்பு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

லாக்டவுன் நீட்டிக்க வேண்டும் என பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா மாநிலங்கள் கேட்டுள்ளன. தங்கள் மாநிலத்தில் பாதிப்பு மண்டலங்களைப் பிரிக்கும் அதிகாரத்தையும் கோரியுள்ளன. இதற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

4-வது கட்ட லாக்டவுனில் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படாது. சிவப்பு மண்டலத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படலாம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அனுமதிக்கப்படாது.

ரயில்வே மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அவசியத்தின் அடிப்படையில் முக்கிய நகரங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால் பிஹார், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ரயில், விமானப் போக்குவரத்தை மே மாத இறுதிவரை தொடங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளன. அதேசமயம் கட்டுப்பாடுகளை பொருளாதார நடவடிக்கைக்காக தளர்த்த தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால், வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தில் பேருந்துகளை இயக்க தமிழகம், மகாாராஷ்டிரஅரசுகள் சம்மதிக்கவில்லை.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் அனைத்தையும் வரும் 31-ம் தேதி வரை இயக்க வாய்ப்பு இல்லை.

குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரள அரசுகள் 4-வது லாக்டவுனில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க தளர்வுகள் தேவை எனக் கோரியுள்ளன.

கேரள அரசைப் பொறுத்தவரை மாவட்டங்களுக்கு இடையே குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால், ரயில், விமானப் போக்குவரத்தைத் தொடங்க சம்மதிக்கவில்லை.

இந்த 4-வது லாக்டவுனில் புறநகர் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் போன்றவை குறைந்த பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படலாம். மேலும், வாடகைக் கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை கட்டுப்பாடுகளுடன் சிவப்பு மண்டலத்தில் இயக்கவும் அனுமதிக்கப்படலாம்''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x