பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பில் காலை 9 மணிக்கு முதல் பூஜை நடத்தப்பட்டது.

நடை திறப்பையொட்டி 10 குவின்டால் மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் தொற்று பிரச்சினை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நடை திறப்பை குறிக்கும் வகையில் வழக்கமாக முழங்கப்படும் ராணுவ வாத்தியமும் முதல் முறையாக இசைக்கப்படவில்லை. தலைமை அர்ச்சகர் ராவல் ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி தலைமையிலான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தியதும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

கோயில் நடை திறப்பையொட்டி மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பத்ரிநாத் கோயில் நடை முன்னதாக ஏப்ரல் 30-ம் தேதி திறக்கப்பட இருந்தது. கரோனா வைரஸ் தொற்று பிரச்சினை காரணமாக மே 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் நடை 6 மாத இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in