Published : 15 May 2020 03:18 PM
Last Updated : 15 May 2020 03:18 PM

‘‘சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில் வேண்டும்’’ - மங்களூருவில் தொழிலாளர்கள் போராட்டம்

மங்களூரு

மங்களூருவில் இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதமாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலத்துக்கும் செல்கின்றனர்.

இதில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாகச் சென்றபோது உயிரிழந்த சம்பவமும் நடந்தது.

இதனால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இதுவரை 10 லட்சம் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்.


இந்தநிலையி்ல மங்களூருவில் இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அவர்கள் மங்களூரு டவுண்ஹால் பகுதியில் திரண்டு சிறப்பு ரயில் விடக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதாகவும், சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x