Last Updated : 15 May, 2020 02:57 PM

 

Published : 15 May 2020 02:57 PM
Last Updated : 15 May 2020 02:57 PM

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 4 நாட்கள் தாமதமாகத் தொடங்க வாய்ப்பு; இந்திய வானிலை மையம் அறிவிப்பு: ஸ்கைமெட் மாறுபட்ட கணி்ப்பு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 4 நாட்கள் தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா ஆகியவற்றுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும்.

கத்திரி வெயில் தொடங்கி நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற ஏக்கம் நாடு முழுவதும் உள்ளது. தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதாக கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

“இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கமான தேதிக்குப் பதிலாக சற்று தாமதமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும் எனும் நிலையில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக ஜூன் 5-ம் தேதி தொடங்கும்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் பருவமழை நாளை (16-ம் தேதி) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக 22-ம் தேதி வருவதற்குப் பதிலாக புயல் காரணமாக முன்கூட்டியே அந்தமானில் தொடங்குகிறது.

கடந்த ஆண்டு அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக 2 நாட்கள் முன்கூட்டியே 18-ம் தேதி தொடங்கி, தாமதமாக கேரளாவில் ஜூன் 8-ம் தேதி ஒருவார தாமதத்துக்குப் பின் தொடங்கியது. நாடு முழுவதும் ஜூலை 19-ம் தேதி தீவிரமடைந்தது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பாகவே இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் பருவமழை வழக்கமான தேதிக்குப் பதிலாக 3 முதல் 7 நாட்கள் தாமதமாகத் தொடங்கும். டெல்லியில் ஜூன 23-ம் தேதிக்குப் பதிலாக 27-ம் தேதி தொடங்கும்.

வடமேற்கு இந்தியா பகுதிகளில் சற்று முன்கூட்டியே அதாவது ஜூலை 15-ம் தேதிக்குப் பதிலாக ஜூலை 8-ம் தேதியே தொடங்கும். அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து பருவமழை விடைபெறத் தொடங்கும்.”

இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது ஸ்கைமெட்?

ஆனால், தனியார் வானிலை அமைப்பான ஸ்கைமெட் வெதர் நிறுவனம் மாறுபட்ட கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கணிப்பின்படி வரும் 28-ம் தேதியே கேரளாவில் தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கணிப்பு வழக்கமாக பருவமழை தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு மேல் 2 நாட்கள் தாமதமாகவோ அல்லது 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலால் அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை சற்று முன்கூட்டியே நாளை (16-ம் தேதி)தொடங்கும். ஆனால், கேரளாவில் வழக்கமான தேதியில் அல்லது இரு நாட்கள் முன்கூட்டியே அல்லது தாமதமாகவோ தொடங்கலாம் என்று ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x