Last Updated : 15 May, 2020 12:38 PM

 

Published : 15 May 2020 12:38 PM
Last Updated : 15 May 2020 12:38 PM

கடன் கொடுத்தது யார், வாங்கியது யார்? இரு அமைச்சர்களும் பேசி முடிவெடுங்கள்: ப.சிதம்பரம் கிண்டல் 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இரு வேறு அறிக்கைகள் வெளியிட்டதால் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பைச் சரி செய்ய ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார மீட்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த இரு நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு கடன் திட்டங்கள், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பிணையின்றி வங்கிகளில் கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும். ரூ.100 கோடிவரை விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் இதற்குத் தகுதியானவை. 4 ஆண்டுகளில் கடன் தொகையைச் செலுத்தலாம், முதல் ஓராண்டு செலுத்தத் தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன்அறிவித்தார்.

அதேசமயம், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில், “அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை வைத்துள்ளன” என்று தெரிவித்தார்.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் நிர்மலா சீதாாராமன், நிதின் கட்கரி இருவரையும் கிண்டலுடன்விமர்சித்துள்ளார்.

அதில், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில், 'அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வைத்துள்ளன' என்றார். நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், '45 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்குப் பிணையில்லாத கடன் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

நான் கேட்கும் கேள்வியெல்லாம், யார் கடன் கொடுத்தது?, யார் யாரிடம் கடன் பெற்றார்கள்? என்பதுதான். முதலில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும் தங்களின் கணக்குகளைச் சரிசெய்துகொள்ளட்டும். அதன் பின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அரசின் உதவியில்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x