Last Updated : 14 May, 2020 01:09 PM

 

Published : 14 May 2020 01:09 PM
Last Updated : 14 May 2020 01:09 PM

ரயில் டிக்கெட் இருந்தாலும் கரோனா அறிகுறி இருந்தால் பயணிக்க முடியாது; பணம் திருப்பித் தரப்படும்: ரயில்வே அறிவிப்பு

ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பயணி வைத்திருந்தாலும், ரயில் புறப்படும் முன் நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பயணி பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார். அவருக்கான டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

''ரயிலில் பயணிக்க வரும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக பயணத்துக்கு முன்பாக பரிசோதிக்கப்படுவார்கள். இதில் கரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பரிசோதனையின்போது பயணி ஒருவருக்கு அதிகமான காய்ச்சல் அல்லது கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருப்பதை மருத்துவ ஊழியர்களால் கண்டறியப்பட்டால் அந்தப் பயணி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தாலும் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார். அந்தப் பயணிக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும்.

ஒரு குழுவாக டிக்கெட் பெற்று, ஒரே பிஎன்ஆர் எண்ணில் பயணிக்க நேர்ந்தால், அதில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்தாலும் மற்ற பயணிகளும் இதேபோன்று பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் குறி்ப்பிட்ட பயணி பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு அவரின் டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும். அந்தக் குழுவில் வந்த அனைவரும் தாங்களும் பயணிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தாலும் அவர்களின் டிக்கெட் கட்டணமும் முழுமையாகத் திருப்பித் தரப்படும்''.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x