மக்களவையில் திரிணாமூல் பெரிய பங்காற்றும் - மமதா பானர்ஜி

மக்களவையில் திரிணாமூல் பெரிய பங்காற்றும் - மமதா பானர்ஜி
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் 34 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் மக்களவையில் மிகப்பெரிய பங்கையாற்றும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது : மக்களின் நலனுக்காக பெரிய பங்கையாற்றுவோம். 42 தொகுதிகளில் 34-இல் வெற்றி என்பது தெள்ளத் தெளிவான வெற்றியை நிரூபித்துள்ளது. எங்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு மக்கள் சிறந்த விடையை அளித்துள்ளார்கள்.

இது ஒரு 5 அல்லது 6 முனைப்போட்டி, பல கட்சிகள் களத்தில் இருந்தன. இருந்தும் மக்கள் திரிணாமூல் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்ததையே இந்த முடிவுகள் எடுத்தியம்புகின்றன.

34 வேட்பாளர்களில் 33% பெண்கள். ஆனால் 543 தொகுதிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 11% தான். இந்த வகையில் இது வரலாற்று சிறப்பு மிக்கது. மக்களவையில் பலரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி பேசுவார்கள் ஆனால் அதற்காக ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றார் மமதா பானர்ஜி.

மக்களவையில் சுதிப் பந்தோபாத்யாய் திரிணாமூல் கட்சியின் தலைவராக செயல்படவுள்ளார். ராஜ்ய சபா உறுப்பினர் முகுல் ராய் திரிணாமூல் நாடாளுமன்ற கட்சித் தலைவராகச் செயலாற்றவிருக்கிறார்.

கல்யாண் பானர்ஜி கட்சிக் கொறடாவாகச் செயலாற்றுவார் என்று மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in