Published : 13 May 2020 07:50 AM
Last Updated : 13 May 2020 07:50 AM

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மகாராஷ்டிர மாநிலத்தில் 50% கைதிகளுக்கு ஜாமீன்

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சிறைகளில் உள்ள 50 சதவீத கைதிகளுக்கு தற்காலிக ஜாமீன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதன்மூலம் கரோனா வைரஸ் பாதிப்பில் அம்மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மும்பையில் ஆர்தர் சாலை மத்திய சிறையில் உள்ள 184 கைதிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மற்ற கைதிகளுக்கு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து, நீதிபதி ஏஏ சையது, கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) சஞ்சய் சஹாந்தே மற்றும் சிறைத் துறை இயக்குநர் ஜெனரல் எஸ்என் பாண்டே ஆகியோர் அடங்கிய உயர்நிலைக்குழு ஆலோசனை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ளசிறைகளில் உள்ள 50 சதவீத கைதிகளுக்கு தற்காலிக ஜாமீன் அல்லது பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் எந்தெந்த கைதிகளை எப்போது விடுவிப்பது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும்,இது தொடர்பான உச்ச நீதிமன்றவழிகாட்டுதலின்படி இதுகுறித்து முடிவு செய்யப்படும் என உயர்நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளில் குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு தற்காலிக ஜாமீன் அல்லது பரோல் வழங்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு யார் யாருக்கு ஜாமீன் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய மாநில அசுகள் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x