Published : 13 May 2020 07:43 AM
Last Updated : 13 May 2020 07:43 AM
திருப்பதி: தமிழர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்து, பொங்கலிட்டு கொண்டாடுவதைப் போல, சித்தூர் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுவது ஐதீகம். கங்கையம்மன் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்பட்டு, அம்மனுக்கு காலையில் கூழ் வார்த்து, இரவில் கும்பம் செலுத்தி வழிபடுவார்கள். மறுநாள் மாலையில் அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்று ஏரியில் சங்கமிப்பார்கள்.
சித்தூர் மாவட்டம் புங்கனூரில் கங்கையம்மன் திருவிழா சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் தொடங்கும். அதன் பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒவ்வொரு ஊர்களில் இந்த பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறும். இதில் சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, குப்பம் ஆகிய ஊர்களில் நடைபெறும் இவ்விழா வெகு பிரபலமாகும்.
திருப்பதியில் உள்ள தாத்தய்ய குண்டா, அவிலாலா பகுதியில் கங்கையம்மன் திருவிழா சுமார் ஒரு வாரம் வரை நடைபெறுவது வழக்கம். வழக்கமாக சித்தூர், திருப்பதியில் நேற்று கங்கையம்மன் திருவிழா நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த திருவிழா நடைபெறவில்லை. 187 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு ஆண்டுகூட நிறுத்தப்படாமல் நடந்த திருவிழா, தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பக்தர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் முடிவுக்கு வந்த பிறகு 2 அல்லது 3 மாதத்துக்குப் பிறகு கங்கையம்மன் திருவிழாவை நடத்தலாம் என கோயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT