Last Updated : 12 May, 2020 03:37 PM

 

Published : 12 May 2020 03:37 PM
Last Updated : 12 May 2020 03:37 PM

ஆசிரியை உயிரிழப்புக்கு ரூ.1 கோடி உதவி: லாக்டவுன் நீடிக்கணுமா, வேண்டாமா? டெல்லி மக்களிடம் கேஜ்ரிவால் கருத்துக் கேட்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனை வரும் 17-ம் தேதிக்குப் பின் முழுமையாக நீக்குவதற்கு வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக, லாக்டவுன் தளர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏற்கெனவே 3 லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அதன்படி 3-வது கட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதி முடிவதையடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் லாக்டவுனை படிப்படியாக எவ்வாறு தளர்த்துவது என்பது குறித்து முதல்வர்கள் செயல் திட்டத்தைத் தயாரித்து வரும் 15-ம் தேதி்க்குள் அனுப்ப பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து 4-ம் கட்ட லாக்டவுன் இருக்கும், ஆனால் தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை சூசகமாக மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளார்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காணொலி மூலம் இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், ''வரும் 17-ம் தேதி 3-ம் கட்ட லாக்டவுன் முழுமையாக நீக்கப்படாது. ஆனால் சில தளர்வுகள் இருக்கும். 17-ம் தேதிக்குப் பின் என்ன செய்யலாம் என பிரதமர் மோடி முதல்வர்களிடம் கேட்டுள்ளார். எந்தமாதிரியான தளர்வுகள் தேவை என ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வரையும் பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

வரும் 15-ம் தேதிக்குள் கருத்துகளை, ஆலோசனைகளைத் தெரிவிக்க பிரதமர் மோடி கேட்டுள்ளார். நான் இப்போது மக்களிடம் கேட்கிறேன். என்ன விதமான தளர்வுகளை நீங்கள் அவசியம் என நினைக்கிறீர்கள்? 17-ம் தேதிக்குப் பின் பொருளாதார நடவடிக்கையைத் தொடங்க என்ன தளர்வு தேவை. தளர்வுகளைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மக்கள் தங்கள் கருத்துகளை, ஆலோசனைகளை எனக்கு அனுப்பலாம். அவற்றை நாங்கள் பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்புகிறோம். பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோ, டாக்ஸி, பள்ளிகள், மார்க்கெட் போன்றவற்றை இயங்க அனுமதிக்க வேண்டுமா. நாம் அனைவரும் லாக்டவுனில் இருந்திருக்கிறோம். அடுத்து நாம் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். அதற்கு நமக்கு ஆலோசனைகள் அவசியம். அதேசமயம், சமூக விலகல் மிகவும் முக்கியம்.

மக்கள் மட்டுமல்லாது, மருத்துவர்கள், பல்துறை வல்லுநர்களும் கருத்துத் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளை 1031 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அல்லது 88000 07722 எனும் வாட்ஸ் அப் எண்ணிலும் பதிவிடலாம். அல்லது, delhicm.suggestions@gmail.com. என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன். லாக்டவுன் தொடர வேண்டுமா அல்லது வேண்டாம? இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் “ எனத் தெரிவித்தார்.

ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி

முதல்வர் கேஜ்ரிவால் ஊடகங்களிடம் பேசுகையில், ''டெல்லி அரசுக்கு உட்பட்ட பள்ளியில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய ஆசிரியை கரோனாவில் உயிரிழந்தார். ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உணவு உள்ளிட்ட உதவிகளை அளித்து வந்தார். பலருக்கும் உணவு அளிக்கும்போது நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். கரோனா போர்வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். அந்த ஆசிரியையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு டெல்லி அரசு சார்பில் ஏற்கெனவே அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இது பண உதவி மட்டுமே, அந்த ஆசிரியையின் உயிருக்கு ஈடு செய்ய முடியாது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x