Last Updated : 12 May, 2020 01:54 PM

 

Published : 12 May 2020 01:54 PM
Last Updated : 12 May 2020 01:54 PM

தலைவர் மவுலானா சாத் மகனிடம் நடந்த விசாரணையால் தப்லீக்-எ-ஜமாத்தினருக்கு நெருக்கடி அதிகரிப்பு

தப்லீக்-எ-ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத்- கோப்புப் படம்

புதுடெல்லி

தப்லீக்-எ-ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத்தின் மகனிடம் டெல்லி போலீஸாரின் விசாரணை நடத்தினர். இதில், வெளியானப் பல தகவல்களால் அந்த அமைப்பினருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக்கின் மதமாநாட்டிற்கு பல வெளிநாட்டினர் கரோனா தொற்றுடன் கலந்து கொண்டனர். இவர்களால், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 30 சதவிகிதம் மதமாட்டினர் காரணமாயினர்.

இதையடுத்து சர்சைக்குள்ளாகி கவனத்திற்கு வந்த தப்லீக் அமைப்பின் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்தது. இதன் விசாரணைக்காக, தப்லீக் அமைப்பின் தலைவரான மவுலானா சாத் உள்ளிட்ட ஆறு நிர்வாகிகளுக்கும் இதுவரை 4 நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கானப் பதில்களில் திருப்தி அடையாத டெல்லி போலீஸார் அதில், மவுலானா சாத் குறிப்பிட்டபடி அவரது மூன்று மகன்களில் ஒருவரான மவுலானா முகம்மது யூசுப்பை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.

கடந்த வாரம் டெல்லியில் இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் வெளியான பல தகவல்களின் அடிப்படையில் தற்போது வருமானவரித்துறையும் தப்லீக் அமைப்பை கண்காணிக்கத் துவங்கி உள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘தப்லீக் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட 29 முக்கிய நிர்வாகிகள் பெயர்கள் கிடைத்துள்ளன.

டெல்லியின் கரோனா முகாம்களிலும், தம் வீடுகளிலும் உள்ளவர்களிடம் ஒவ்வொருவராக விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களில் சிலர் தலைமறைவாகவும் உள்ளனர். தப்லீக்கிடம் இருப்பதாகத் தெரியவந்த 32 வங்கிக்கணக்குகளையும் வருமானவரித்துறை ஆராய்கிறது.’ எனத் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தப்லீக்கினருக்கு நிதி உதவி கிடைக்கிறது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த அமைப்பு, டெல்லி போலீஸார் உதவியுடன் மவுலானா சாத்தின் சொந்த ஊரான உத்திரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் உள்ள பண்ணை வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தினர். இதன் விசாரணையிலும் நோட்டீஸ் அளித்து நடவடிக்கை தொடர்கிறது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லியின் கரோனா முகாம்களில் உள்ள தப்லீக்-எ-ஜமாத்தினர் கூறும்போது, ‘எங்கள் தலைவர் மவுலானா சாத் தன்னிச்சையாக செயல்படுவதாகப் புகார் கூறி ஒரு சிறியக் குழுவினர் எதிர்த்தனர்.

இதனால், ’ஷுரா தப்லீக்-எ-ஜமாத்’ எனும் பெயரில் ஒரு புதிய குழு 2018 இல் உருவானது. குஜராத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு மத்திய அரசிற்கு நெருக்கமாகி விட்டது.

இவர்களிடம் பல தகவல்கள் பெற்று பல்வேறு வழக்குகள் தொடுத்து மத்திய அரசு இதுபோல் தப்லீக்கிற்கு நெருக்கடி அளித்து வருகிறது. எங்களுக்கு சொந்தமான சொத்துக்களிலும் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவை அனைத்தையும் நாம் எதிர்த்து தொடங்கியுள்ள சட்டப் போராட்டத்தில் இறைவன் அருளால் நாங்களே வெல்வோம்.’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, மவுலானா சாத்தின் சுமார் 300 குரல் பதிவுகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. இதில் வாட்ஸ்அப்பில் வைரலான சுமார் 20 குரல்பதிவுகள் புனையப்பட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது.

இதன் மீது தப்லீக்கின் தலைமையகம் அமைந்துள்ள ஹசரத் நிஜாமுத்தீனின் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. இதனால், குரல்பதிவுகள் தடயவியல் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியின் மதமாநாட்டிற்கு வந்தவர்களில் பலியானவர்களும் உண்டு. இதில் இறந்த ஐந்து தமிழர்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று காரணம் எனத் தெரிகிறது

இதனால், இவர்கள் மரணத்திற்கு காரணமாக மவுலானா சாத் மீது வழக்கு பதிவு செய்யலாம் என டெல்லி காவல்துறை முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x