பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா

பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா
Updated on
1 min read

காஷ்மீர் சட்டப்பேரவை சபாநாயகருக்கு அழைப்பு விடுக்காததால் பாகிஸ்தானில் நடக்கும் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடாளுமன்றங்களின் மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களின் சபாநாயகர்கள் பங்கேற்கும், காமன்வெல்த் பார்லிமென்டரி யூனியன் மாநாடு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க இந்திய மக்களவை சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய பகுதி காஷ்மீர் என்பதால், அந்த மாநில சபாநாயகருக்கு மட்டும் பாகிஸ்தான் அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டெல்லியில் வெள்ளியன்று அவசர கூட்டம் நடத்தினார். இதில் 31 மாநில சட்டசபைகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு சுமித்ரா மகாஜன் கூறியதாவது:

காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பு விடுக்காததால், பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பது என்று சபாநாயகர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்காவிட்டால், மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று காமன்வெல்த் பார்லிமென்டரி யூனியன் தலைவருக்கு தகவல் அனுப்பி விட்டோம். இந்த யூனியனில் உள்ள எல்லா சபாநாயகர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். அந்த விதியை மீறி பாகிஸ்தான் செயல்படுகிறது.

கடந்த 1951-57-ம் ஆண்டு விதிகளை காட்டி காஷ்மீர் சபாநாயகரை அழைக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. அந்த சட்டம் காலாவதியாகி விட்டது. கடந்த 2007-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் யூனியன் கூட்டத்தில் காஷ்மீர் சபாநாயகர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.

இந்த முடிவுக்கு, நாட்டின் அனைத்து சட்டசபை சபாநாயகர்களுக்கும் காஷ்மீர் சபாநாயகர் ரவீந்திர குப்தா நன்றி தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, ‘இந்த பிரச்சினை இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு தொடர்பானது. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு’என்றார்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மற்றும் காஷ்மீரின் உதாம்பூர் ஆகிய 2 இடங்களில் அடுத்தடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு நாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் சபாநாயகருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுக்காதது பிரச்சினையை மேலும் பெரிதாக்கி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in