Last Updated : 11 May, 2020 06:09 PM

 

Published : 11 May 2020 06:09 PM
Last Updated : 11 May 2020 06:09 PM

போலிச் செய்திகளைப் புறக்கணியுங்கள்; மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் இல்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் கடுமையாகப் பரவி வருவதன் விளைவாக அரசாங்கம் அதற்கான செலவுகளைச் சமாளிப்பதில் தொடர்ந்து பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக கடந்த மே1 அன்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் ஜனவரி முதல் எந்தவொரு நிலுவைத் தொகையும் செலுத்தப்படாது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சம்பளத்திலும் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்திகளும் சில ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது.

இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில், ''ஊடகங்களின் சில பிரிவினரால் பரப்பப்படும் போலிச் செய்திகளை தயவுசெய்து புறக்கணிக்கவும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை'' என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x