கரோனா துயரம் ஓய்ந்தாலும் புலம்பெயர் தொழிலாளர் துயரம் ஓயுமா? - ம.பி. சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி- 13 பேர் காயம்

விபத்து பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்ட போது..| படம்: சிறப்பு ஏற்பாடு.
விபத்து பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்ட போது..| படம்: சிறப்பு ஏற்பாடு.
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மே 9ம் தேதி ஹைதராபாத்திலிருந்து ஆக்ரா சென்ற லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏகப்பட்ட மாங்காய்கள், மாங்கனிகள் மீது இவர்கள் அமர்ந்து சென்றனர். லாரி கேபினில் ஓட்டுநர், கிளீனர், இன்னொரு ட்ரைவர் இருந்தனர். இரவு 11.30 மணிக்கு லாரி கவிழ்ந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்

“ஹைதராபாத்திலிருந்து ஆக்ராவுக்குச் செல்லும் லாரியில் மாங்கனிகளுக்கு மேல் 15 புலம் பெயர் தொழிலாளர்களும் பயணித்தனர். இவர்கள் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்” என்று நரசிங்பூர் நிர்வாகி ராஹுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

இறந்தவர்கள் லாரி டயரில் நசுங்கி பலியானதாகவும், லாரி படுவேகமாகச் சென்றதே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் 11 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் 2 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்..

மே 8ம் தேதி 16 புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு பலியான துயரம் மறைவதற்குள் இன்னொரு விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், அதுவும் கோரமான மரணம்.

ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பலியானோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், காயமடைந்தோர் விரைவில் குணமடைய அனைத்து துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in