Last Updated : 10 May, 2020 05:05 PM

 

Published : 10 May 2020 05:05 PM
Last Updated : 10 May 2020 05:05 PM

வெளிநாட்டில் சிக்கித் தவித்த 572 இந்தியர்கள் நாடு திரும்பினர்: மும்பையின் பிரத்யேக ஹோட்டல்களில் கட்டாயத் தனிமை 

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 572 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினர். அவர்கள் உடனடியாக இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக ஹோட்டல்களில் கட்டாயத் தனிமையில் வைக்க அழைத்துச்செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சிக்கித் தவித்து வந்தனர். தற்போது லாக்டவுன் விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் நாடு திரும்ப விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவித்த சுமார் 572 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். லண்டனில் இருந்து ஒரு விமானம், சிங்கப்பூரிலிருந்து மற்றொரு விமானம் ஆகிய இரு விமானங்கள் மூலமும் இவர்கள் இன்று காலை மும்பை வந்தடைந்தனர்.

விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்கள் முதலில் பரிசோதனை செய்யப்பட்டனர். பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தனிமையில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் அரசு வழங்கும் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளில், அதிகபட்சம் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சிலர் மகாராஷ்டிரா நகரங்களான புனே, துலே, கோலாப்பூர் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள். பிற நகரங்களில் இருந்து பயணிகள் அரசு வழங்கிய போக்குவரத்து வசதிகளில் அங்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் மட்டும் அருகிலுள்ள ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அருகிலுள்ள மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் அதேபோன்ற கட்டாயத் தனிமையில் வைக்கப்படுவார்கள் .

தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூர் ஹோட்டல்களிலும் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களின் உடல்நலம் அவ்வப்போது கண்காணிக்கப்படும். அவர்களில் யாருக்காவது கரோனா வைரஸ் 'பாஸிட்டிவ்' என கண்டறியப்பட்டால் அவர்கள் உடனே கோவிட் 19 சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவில் மருத்துவமனைகளையும் கோவிட் -19 சிகிச்சைக்கான வசதிகளாக மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே மாற்றி தயாராக வைத்துள்ளது.

இது தவிர, மணிலாவில் (பிலிப்பைன்ஸ்) இருந்து 241 பயணிகளை அழைத்துவரும் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மகாராஷ்டிரா அரசு அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x