

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் சீனாவின் எல்லையோர பகுதியில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதலும் கைகலப்பும் ஏற்பட்டது, இருதரப்பிலும் காயமடைந்தனர்.
இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேருக்கும், சீன வீரர்கள் 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிம் மாநிலத்தின் வடகிழ்கு எல்லையில் இருக்கும் நகு லா செக்டார் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் எல்லைப்பகுதியில் காவலில் இருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நகு லா செக்டர் கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிறது
இ்ருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது அங்கு 150 மேற்பட்ட வீரர்கள் இருதரப்பிலும் இருந்தனர். இருதரப்பு வீரர்களின் மோதலும் விலக்கியபின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டு மோதல் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தப் பகுதியில் இன்னும் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால் அவ்வப்போது இருநாட்டு வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
எல்லைப்பகுதியில் சீன வீரர்களுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்படுவது முதல்முறையல்ல. 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் லடாக்கில் பாங்காங் ஏரிப்பகுதியில் இரு தரப்பு வீரர்களும் கற்களை எறிந்து தாக்கிக்கொண்டார்கள். அதன்பின் சிக்கிம்மின் டோக்லாம் பகுதியிலும் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் காணப்பட்டது