Last Updated : 09 May, 2020 01:44 PM

 

Published : 09 May 2020 01:44 PM
Last Updated : 09 May 2020 01:44 PM

மன்னிப்பு கேளுங்கள் அல்லது குற்றச்சாட்டை நிரூபியுங்கள்: அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி

அமித் ஷா, மம்தா பானர்ஜி : கோப்புப்படம்

கொல்கத்தா

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்குச் செல்லும் ரயில்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று எழுதிய கடிதத்தில், ''லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலம் அனுப்பி வைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. ஆனால், மேற்கு வங்க அரசு மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இது புலம்பெயர் தொழிலாளர்களைப் பெரிதும் துன்பப்படுத்தும்.

புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்துக்கு ரயில்களில் அனுப்புவதற்கு மேற்கு வங்க அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ரயில்களை மேற்கு வங்க எல்லைக்குள் விட அனுமதிக்க அரசு மறுக்கிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். உங்களின் இந்தச் செயல் அவர்களை வேதனையில் ஆழ்த்தும்'' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பதிலடி தரும் வகையில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது பலவாரங்களாக மவுனியாக இருந்துவிட்டு, தனது கடைமைகளில் இருந்து தவறிவிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பேசுகிறார்.

பொய் மூட்டைகளால் மக்களைத் தவறாகத்தான் வழிநடத்த முடியும். தனது சொந்த அரசால் கைவிடப்பட்ட புலம்பெயர்ந்த மக்களைப் பற்றி அமித் ஷா கவலைப்பட்டு பேசுவது முரணாக இருக்கிறது. மேற்கு வங்க அரசு மீதான உங்களின் பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x