Last Updated : 08 May, 2020 11:10 AM

 

Published : 08 May 2020 11:10 AM
Last Updated : 08 May 2020 11:10 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 56 ஆயிரத்தைக் கடந்தது; 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று; 103 பேர் பலி: மகாராஷ்டிரா, குஜராத்தில் நிலைமை மோசம்

லாக்டவுன் கொண்டுவந்தபோதிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,539 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 29.35 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று கரோனாவால் 103 உயிரிழப்புகள் நடந்தன. அதில் மகாராஷ்டிராவில் 43 பேர், குஜராத்தில் 29 பேர், மத்தியப் பிரதேசத்தில் 8 பேர், மேற்கு வங்கத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 5 பேர், தமிழகம், ஆந்திரா, உத்தரப் பிரதேசத்தில் தலா இருவர், பிஹார், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 29 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 66 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 29.

உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆகவும், கர்நாடகாவில் 30 ஆகவும் , ஆந்திராவில் 38 ஆகவும் அதிகரித்துள்ளது. பஞ்சாப்பில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 9 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணாவில் 7 பேரும், பிஹாரில் 5 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும், இமாச்சலப் பிரதேசம், ஒடிசாவில் தலா 2 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,974 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,301 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 5,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,931 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 7,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3,427 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,547 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 3,252 பேரும், தெலங்கானாவில் 1,123 பேரும், கேரளாவில் 503 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 474 பேர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 3,701 பேர், ஆந்திராவில் 1,847 பேர், கர்நாடகாவில் 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 793 பேர், மேற்கு வங்கத்தில் 1,548 பேர், பஞ்சாப்பில் 1,644 பேர், ஹரியாணாவில் 625 பேர், பிஹாரில் 550 பேர், அசாமில் 54 பேர், உத்தரகாண்டில் 61 பேர், ஒடிசாவில் 219 பேர், சண்டிகரில் 135 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 42 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 132 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 46 பேர், திரிபுராவில் 65 பேர், புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மேகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x