Published : 08 May 2020 08:20 AM
Last Updated : 08 May 2020 08:20 AM

இந்தியாவில் 9 மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்: ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு

புதுடெல்லி

கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அடுத்த 9 மாதங்களில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தைகளும் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும் பிறக்கலாம்எனத் தெரிகிறது. இதே காலத்தில் நைஜீரியாவில் 64 லட்சம், பாகிஸ்தானில் 50 லட்சம், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள்பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பிரச்சினைநீடித்து வருவதால் குழந்தை பெறப்போகும் தாய்மார்களுக்கும், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் சுகாதார நலன்களில் குறைபாடு ஏற்படலாம். இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யுனிசெப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, "கரோனா பிரச்சினை நிலவுவதால் கர்ப்பிணிகளுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் சுகாதார சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக வளரும் நாடுகள் இதுபோன்ற சேவை அளிப்பதில் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ளும்" என்றார்.

இந்திய ஆர்த்ரிட்டிஸ் (மூட்டுநோய்) பவுண்டேஷன் தலைவரும்,பொது சுகாதார நல நிபுணருமான டாக்டர் சுஷில் சர்மா கூறும்போது, “கரோனா பிரச்சினை காலத்தில் அதிகளவில் குழந்தை பிறக்கும்போது, பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கரோனா காலத்தில் குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முறைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காலத்தில் கர்ப்பத் தடை சாதனங்கள் பெண்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் அதிகளவில் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x