Published : 07 May 2020 04:08 PM
Last Updated : 07 May 2020 04:08 PM

திரும்ப வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் யோகி அரசின் மிகப்பெரிய திட்டம்: வேண்டாம் என்று ‘டயல்’ செய்த 4 மாநில முதல்வர்கள்

மற்ற மாநிலங்களில் சிக்கியிருக்கும் தங்கள் மாநிலத் தொழிலாளர்களை திரும்ப அழைத்துக் கொள்ள முதன் முதலில் ஏற்பாடு செய்த மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.

இதனையடுத்து பஞ்சாப், கர்நாடகா, ஹரியாணா, குஜராத் முதல்வர்கள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டயல் செய்து பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும் சமயத்தில் இவர்களைத் திரும்பவும் உங்கள் மாநிலத்துக்கே அழைத்துக்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர்.

செவ்வாய், புதன் இரண்டு நாட்களிலும் 4 முதல்வர்கள் உ.பி. முதல்வர் யோகிக்கு போன் செய்து உ.பி மாநிலத் தொழிலாளர்களை நாங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்கிறோம். பொருளாதார நடவடிக்கைகள் மீளும் போது தொழிலாளர்கள் இல்லாமல் வேலை கெட்டு விடும் என்று அவரிடம் முறையிட்டனர்

இது தொடர்பாக உ.பி.மாநில சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது , “ஒரு மாதத்திற்கு முன்பாக யோகி ஆதித்யநாத் வேளாண் உற்பத்தி கமிஷனர் அலோக் சின்ஹா மூலம் கமிட்டி ஒன்று அமைத்து ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க அறிவுறுத்தினார். இலக்கு என்னவெனில் 15 லட்சம் பேருக்கு வேலை, என் துறையில் மட்டுமே 5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு இலக்கு நிர்ணயித்தார்” என்றார்.

இந்தக் கமிட்டியை ஏற்படுத்திய 3 வாரங்களில் யோகி ஆதித்யநாத் மற்ற மாநிலங்களுடன் தான் ஒருங்கிணைந்து அங்கிருக்கும் உ.பி.தொழிலாளர்களை சொந்த மாநிலம் வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதுவரை 6.5 லட்சம் தொழிலாளர்கள் மாநிலம் திரும்பியுள்ளனர்.

“அந்த 3 வாரங்களில் நாங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்ய கடுமையாக உழைத்தோம். வங்கிக்கடன் போன்றவற்றைச் சிந்தித்தோம். குறுதொழில்களுக்காக இவர்களுக்கு ரூ.20,000 கடன் வழங்கினால் இவர்கள் தலா 3 பேருக்கு வேலை கொடுக்க முடியும் என்று முடிவெடுத்தோம். தொற்று நோய் தொடங்குவதற்கு முன்பிருந்து இத்திட்டம் நிலுவையில் இருக்கிறது. இதனையடுத்து எங்கள் மாநில மக்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறோம். கொள்ளை நோய் முடிந்த பிறகு நிச்சயம் இத்திட்டம் செயல்படும்” என்று சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்த கேவி.ராஜு தற்போது யோகி ஆதித்யநாத்துடன் இருக்கிறார். இவர் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் நிறுவனங்கள் உ.பி.யில் தங்கள் பணியிடங்களைத் தொடங்குவதை எதிர்நோக்கி அதற்காகப் பணியாற்றி வருகிறார்.

இந்தத் திட்டம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் உ.பி. தங்கள் மாநிலத் தொழிலாளர்களை வெளியில் வேலைக்கு அனுப்பாத மாநிலத்தில் முதன்மை மாநிலமாகத் திகழும் என்று அங்கு எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில்தான் வேண்டாம் உங்கள் மாநிலத் தொழிலாளர்களை திரும்ப அழைக்காதீர்கள், தங்கள் மாநிலத்தில் லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு பொருளாதார மீட்டெடுப்புக்கு இது பெரும் தடையாக மாறி விடும் என்று யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் உரையாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x