ஊரடங்கு உத்தரவால் காற்று மாசு கணிசமாக குறைந்துவிட்டது: பிஹார் கிராமத்தில் இருந்து தெரிந்த அழகிய இமயமலை

ஊரடங்கு உத்தரவால் காற்று மாசு கணிசமாக குறைந்துவிட்டது: பிஹார் கிராமத்தில் இருந்து தெரிந்த அழகிய இமயமலை
Updated on
2 min read

சுற்றுச்சூழல் மாசு குறைந்த நிலையில், பிஹார் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் இருந்து பனிபடர்ந்த இமயமலையை தெளிவாகப் பார்த்த கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், சுற்றுச்சூழல் மாசு குறைந்துள்ளது. இதனால் காற்றின் தரக் குறியீடு அதிகரித்து வருகிறது. ஆலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு கங்கையில் கலக்காததால் கங்கை நதியும் தூய்மை அடைந்து வருகிறது. இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் உள்ள கிராம மக்களுக்கு நேற்று இனிய அதிர்ச்சி தந்த காலையாக விடிந்தது.

பிஹாரில் சிதாமார்ஹி மாவட்டம்நேபாள எல்லையை ஒட்டியுள்ள சிங்வாஹினி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை தங்கள் கிராமத்தில் இருந்து தொலைவில் தெரிந்த பனி படர்ந்தஇமயமலையைக் கண்டு உற்சாகம்அடைந்தனர்.

தங்கள் கிராமத்தில் இருந்து இமயமலை தெரியும் காட்சியின் புகைப்படத்தை கிராம பஞ்சாயத்து தலைவி ரிட்டு ஜெய்ஸ்வால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வீட்டுமாடியில் இருந்து இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் தெளிவாகத் தெரிவதாகவும் 190 கி.மீ. தூரத்தில்உள்ள இமயமலையின் ரம்மியமான அழகு தனக்கு மட்டுமின்றி தங்கள் கிராமத்துக்கே தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இமயமலை தெரிவதை கிராமத்தின் வயது முதிர்ந்தவர்கள் உறுதிப்படுத்தியதாவும் 1980-களின் ஆரம்பத்தில் அந்த முதியவர்கள், கிராமத்தில் இருந்து இமயமலையை பார்த்ததை கூறியதாகவும் பின்னர் மாசு அதிகரிப்பால் இமயமலை தெரியாமல் போய்விட்டதாகவும் ரிட்டு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் ரீ ட்வீட்செய்துள்ளதோடு, சிங்வாஹினி கிராம மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே இமயமலையைப் பார்த்ததாக பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ட்விட்டர்வாசிகள் பலர் இமயமலை தெரிவதாகக் கூறுவதன் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனினும், காற்றின் தரக் குறியீடு பிஹாரில் அதிகரித்துள்ளதாகவும் தொலைவில் உள்ள காட்சிகளின் தெரிவு திறன் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிதாமார்ஹி அருகில் உள்ள முசாபர்பூரில்கடந்த செவ்வாய்கிழமை காற்றின் தரக் குறியீடு மேம்பட்டு அதன் அளவு 54 ஆக இருந்தது. வழக்கமாக குளிர்காலத்தில் மாநிலம் முழுவதும் காற்றின் தரக்குறியீடு 350 முதல் 400 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஹார் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அசோக் குமார் கோஷ் கூறுகையில், ‘‘காற்றுமாசு ஓரிரு நாளில் குறைந்துவிடவில்லை. முதல் கட்ட ஊரடங்கு அமலில் இருந்த போதே காற்றின் தரம் மேம்படத் தொடங்கி இப்போது இரண்டாவது கட்ட ஊரடங்கின் போது அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுச் சூழல் மேம்பட்டுள்ளதோடு காற்றின் தரக் குறியீடு வரும்நாட்களில் மேலும் அதிகரிக்கும்’’ என்று தெரிவித்தார்.

சுற்றுச் சூழல் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங், ‘‘ஊரடங்கால் பிஹார் மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு குறிப்பிடத்தக்க அளவுகுறைந்துள்ளது. மாசு குறைவாக இருந்த நாட்களில் தெரிந்த இமயமலை இப்போது மீண்டும் தெரியத் தொடங்கியுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in