Last Updated : 06 May, 2020 02:44 PM

 

Published : 06 May 2020 02:44 PM
Last Updated : 06 May 2020 02:44 PM

லாக் டவுனை எப்படி தளர்த்தப் போகிறீர்கள்? -மே 17-க்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனை வரும் மே 17-ம் தேதிக்குப்பின் மத்திய அரசு எவ்வாறு தளர்த்தப்போகிறது, மே 17-ம் தேதிக்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர்முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு மூன்றாம் கட்ட லாக்டவுனை அமல்படுத்தியுள்ளது. வரும் 17-ம் தேதி முடியும் இந்த லாக்டவுனை எவ்வாறு தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், மே 17-ம் தேதிக்குப்பின் என்ன வகையான தி்ட்டங்களை செயல்படுத்தப்போகிறது மத்திய அரசு என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிகமான உணவு தானியங்களை உற்பத்தி செய்தமைக்குநன்றி தெரிவித்தார் சோனியா காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் “ சோனியா காந்தி சொல்வதைப் போல் மே 17-ம் தேதிக்குப்பின் லாக்டவுனை எவ்வாறு மத்திய அரசு தளர்த்தப்போகிறது, 17-ம் தேதிக்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்

அனைத்து மாநில முதல்வர்களும் இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி, லாக்டவுனை எவ்வாறு தளர்த்துவீர்கள், அதன்பின் திட்டம் என்ன என்பதை கேட்க வேண்டும்”என்று தெரிவி்த்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்” கரோனா வைரஸிலிருந்து முதியோர்கள், நீரழிவு நோயாளிகள்,இதய நோயாளிகளை காக்க என்ன வழிமுறைகளை மத்தியஅரசு வைத்துள்ளது” எனத் கேள்வி எழுப்பினார்

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பேசுகையில் “ லாக்டவுனை எவ்வாறு மாநிலத்தில் தளர்த்துவது, பொருளாதார மீட்சியை கொண்டுவருவது ஆகியவற்றுக்காக இரு குழுக்களை அமைத்துள்ளோம். களச்சூழலி்ல் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் டெல்லியில் அமர்ந்து கொண்டு சிவப்பு, பச்சை மண்டலங்களை முடிவு செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில் “ மாநிலங்களுக்கு நிதிதொகுப்பு அறிவிக்காதவரை மாநில அரசுகள் எவ்வாறு செயல்படும். எங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கேட்டும் அவரிடம்இருந்து பதில்இல்லை” எனத்தெரிவித்தார்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் “ மாநிலங்கள் பெரும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கின்றன. உடனடியாக உதவித் தேவை. 85 சதவீதம் சிறுதொழில்கள் தொடங்கப்பட வேண்டும். 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” எனத்தெரிவித்தார்

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி குற்றம்சாட்டுகையில்,” மாநில அரசுகளை கலந்தாய்வு செய்யாமல் கரோனா ஹாட்ஸ்பாட்களை மத்தியஅரசு முடிவுசெய்கிறது. இது மாநிலத்தில் குழப்பமான சூழலை ஏற்படுத்தும். மாநில முதல்வர்களுடன கலந்து ஆலோசிக்காமல் டெல்லியில் அமர்ந்து கொண்டு மாநிலங்களுக்கு எதையும் உத்தரவிட முடியாது. இதுவரை மாநிலங்களுக்கான பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து பிரதமர் ஒருவார்த்தைகூட பேசவில்லை” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில் “ நிதியில்லாமல் மாநில அரசுகள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் மத்திய அரசு இதுவரை பணத்தை ஒதுக்கவில்லை. மாநிலங்குக்கு போதுமான பணம் இல்லை என நாளேடுகளில் செய்தி வெளிவருகின்றன” என்றார்
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x