Last Updated : 06 May, 2020 09:36 AM

 

Published : 06 May 2020 09:36 AM
Last Updated : 06 May 2020 09:36 AM

மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது : மாநிலங்களுக்கு நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்குங்கள்- முதல்வர் சந்திரசேகர் ராவ் பாய்ச்சல்

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்

ஹைதராபாத்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து மாநிலங்களை மீட்கவும் மத்திய அரசு முன்வரவில்லை, நாங்களாக மீண்டுகொள்கிறோம் என்று கேட்டாலும் அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் காட்டமாக பேசியுள்ளார்

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 3-வது கட்டமாக நீண்டுள்ளது. தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மாநில அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. ஏழைகள், கூலித்தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கிறார்கள்

லாக்டவுனால் தெலங்கானா மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலங்கானா மாநிலத்தில் லாக்டவுனை மே 29-ம் தேதிவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு மாநில அரசுகளை நடத்தும் போக்கையும், லாக்டவுனை கையாளும் முறையையும் கடுமையாக விமர்சி்த்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது

மத்திய அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் விதம் உண்மையில் எனக்கு வேதனையாக இருக்கிறது. மாநிலங் அரசுகளை இப்படி நடத்தும் என நான் எதிர்பா்க்கவில்லை. மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது என எச்சரிக்கிறேன்.

நாட்டில் ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சிக்குறைவு, மந்தநிலை இருந்திருந்தது,இப்போது கரோனா பெருந்தொற்று வந்தபின் பொருளாதாரத்துக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது.

பிரதமர் மோடியுடன் காணொலி சந்திப்பின்போது பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். மத்திய அரசிடம் பரந்த நிதிக்கொள்கை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. ஆதலால் மாநிலங்களுக்கு நிதியை வழங்கிடுங்கள், அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றேன்

அதுமட்டுமல்ல மத்திய அரசிடம் நிதியில்லை, ஆதலால் உங்களால் மாநிலங்களுக்கு நிதியை வழங்க முடியாது என்பதையும் தெரிவித்தேன். உலகமய கொள்கையுடன் இருப்பதால், மாநிலங்கள் சுயமாக நிதியை பெருக்கிக்கொள்வதற்கான வழிகளையும் தெரிவித்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் பிரதமரிடம் இருந்து இல்லை

நான் பிரதமரிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால், மாநிலங்களுக்கான நிதிப்பொறுப்பு பட்ெஜட் மேலாண்மை மீது கடன் பெறும் அளவை உயர்த்துங்கள், மத்திய அரசு எதையும் பொறுப்பேற்க வேண்டாம் என்றேன். எங்களுக்கு கடன் இருக்கிறது அதை செலுத்தும் காலத்தை ஒத்திவையுங்கள் என்றேன் அதற்கும் பதில் இல்லை. மாநிலங்களுக்கு இருக்கும் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது எனக்குப்புரியவில்லை. மத்திய அரசின் கொள்கை என்ன என்பது எனக்கு புரியவில்லை.

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருப்பேன், அப்போதும் ஏதும் நடக்காவிட்டால், தெலங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் ெசல்ல அவர்களை கட்டணம் செலுத்த மத்திய அரசு சொல்கிறது. வேலையில்லாத, வறுமையில் வாடும் தொழிலாளர்களிடம் டிக்கெட்டிற்கு பணம் கேட்டால் எவ்வாறு கொடுப்பார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட் வழங்க மத்திய அரசிடம் பணமில்லையா?

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அனுப்பி வைப்பதற்காக ரயில்வே துறைக்கு முன்கூட்டியே முன்பணமாக தெலங்கானா அரசு ரூ.4 கோடி செலுத்தியது. ஆனாலும், ரயில்வே துறை முன்பதிவுக் கட்டணமாக ரூ.30 வசூலித்தது. நான் கேட்கிறேன், இதுபோன்ற சிறப்பு ரயி்ல்கள் எப்போதுமா இயக்கப்படுகிறது, இக்கட்டான சூழலில் இதுபோன்ற ரயில்கள் இயக்கப்படும்போது முன்பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டுமா?

மின்கட்டண பில்லைக் கொண்டு வந்து மாநிலங்களின் அதிகாரத்தை அபகரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த கட்டணம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இதை ஏற்றுக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x