Last Updated : 04 May, 2020 08:28 AM

 

Published : 04 May 2020 08:28 AM
Last Updated : 04 May 2020 08:28 AM

100 சதவீதம் ஒழிக்க முடியாது; கரோனாவுடன் வாழத் தயாராகுங்கள்; டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அறிவுரை: 150 மதுக்கடைகள் திறப்பு

டெல்லி முதல்வர் அரவி்ந்த் கேஜ்ரிவால் : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி,

கரோனா வைரஸை நூறு சதவீதம் ஒழித்துவிட்டுதான் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கரோனா வைரஸுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்ட்டது. முதல் இரு கட்ட லாக்டவுன் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் 3-வது கட்ட லாக்டவுனில் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் இன்றுமுதல் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கின்றன. டெல்லியில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் பல்வேறு இடங்களில் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியே வரவும், கடைகளைத் திறக்கவும் டெல்லி அரசு நேற்று வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காணொலி மூலம் மக்களுக்கு நேற்று அறிவித்தார்.

அதில் அவர் பேசியதாவது:

''டெல்லியில் மீண்டும் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் கரோனா வைரஸுடன் வாழ்வதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் கரோனா நோயாளிகள், வைரஸ் இல்லாத சூழலில்தான் டெல்லியில் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும என்றால் அது சாத்தியமில்லை. நாம் அவ்வாறு வாழவும் முடியாது. வைரஸ் இல்லாத இடம் எங்குமில்லை.

தற்போது டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே சிவப்பு மண்டலமாகவும் மற்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம்.

4-ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்வுடன் டெல்லி மக்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கலாம். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களுக்கு லாக்டவுன் நீடித்தாலும் சில விதிமுறைகளில் தளர்வு தந்துள்ளோம்.

கரோனா வைரஸால் அரசுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரசுக்கு ரூ.3,500கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.300 கோடிதான் கிடைக்கும். ஏறக்குறைய 10 மடங்கு இழப்பை அரசு சந்தித்துள்ளது.

மக்களின் நலனுக்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களை நடமாட அனுமதித்துள்ளோம். இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவெளியில் எச்சில் துப்புதல் அசுத்தம் செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தி்ங்கள் முதல் அனைத்து தனியார், அரசு அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்படும். 33 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம். டெல்லியில் பேருந்து, மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளுடன் 150 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்யும் இ-காமர்ஸ் வர்த்தகம் தொடர்ந்து டெல்லியில் அனுமதிக்கப்படும். ஷாப்பிங் மால், திரையரங்கம், சந்தைகள், சலூன்கள் மூடப்படும். அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்படும். அத்தியாவசியமில்லாத தனிக்கடைகள் திறக்கலாம், ஆனால் குறைந்த அளவு பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு பணியாற்ற வேண்டும்''.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x